Published : 29 Jul 2014 04:32 PM
Last Updated : 29 Jul 2014 04:32 PM
'தி இந்து' வாசகர் சொன்ன யோசனையை ஏற்று, ''சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தினால், பள்ளி மாணவர்களாக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள்'' என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கார்த்தி என்ற மாணவர், நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்தபோது சென்னை பல்கலைக்கழக சுவரில் மோதி உயிரிழந்தார். கடந்த சனிக்கிழமை நடந்த இந்த சம்பவம் பலரை அதிர்ச்சி அடையவைத்தது.
>'தி இந்து'வின் வாசகர் குரலில் பேசிய அயப்பாக்கத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர், ''சாலைகளில் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்துவதை முழுமையாக தடுக்க வேண்டும். பந்தயம் நடத்துபவர்களில் பலர் பள்ளி மாணவர்கள். அவர்களுக்கு தங்கள் உயிரை பற்றி யும், அடுத்தவர்களின் உயிரை பற்றியும் கவலையில்லை. எனவே, பந்தயம் நடத்துவது பள்ளி மாணவர்களாக இருந்தாலும் நட வடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
ஜெயக்குமாரின் நியாயமான கோரிக்கையை போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு 'தி இந்து' கொண்டு சென்றது. அதைத் தொடர்ந்து போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து அனைத்து போக்குவரத்து போலீஸாருக்கும் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
"மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் ஈடுபடும் அனைவரையும் கைது செய்யுங்கள். அவர்கள் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் சலுகை அளிக்காமல் கைது செய்யுங்கள்" என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT