Published : 21 Nov 2014 03:09 PM
Last Updated : 21 Nov 2014 03:09 PM
தமிழகத்தில் பிரபாகரன் பிறந்தநாள் விழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சரிடம் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்துயுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தமிழகத்தில் கொண்டாடப்படுவதைத் தடுக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதிமுக சார்பில் வரும் நவம்பர் 27-ம் தேதி அன்று 'தியாகத் திருநாள் பினாங்கு பிரகடன விளக்கப் பொதுக்கூட்டம்' நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டியுள்ள சுப்பிரமணியன் சுவாமி, இத்தகைய பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள வைகோவின் மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும், வைகோவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று சுவாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இந்திய அரசியல் சட்டம் 256-ன் படி ‘மத்திய அரசின் நிர்வாக அதிகாரத்துக்குத் தடையாகவோ, பாரபட்சப்படுத்தும் வகையிலோ மாநில அரசின் நிர்வாகம் செயல் படக்கூடாது’ என்பதை சுட்டிக்காட்டி பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சுவாமி வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT