Last Updated : 18 Feb, 2017 09:04 AM

 

Published : 18 Feb 2017 09:04 AM
Last Updated : 18 Feb 2017 09:04 AM

பிப்.18-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

எதிர்க்கட்சிகளே இல்லாமல் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி அரசுக்கு வெற்றி

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். | முழு விவரம் >>எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:

நிகழ்நேர பதிவு நிறைவடைந்தது!

5.00 pm: தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சபாநாயகர் தனபாலின் உருவபொம்மையை எரிந்து திமுகவினர் ஆர்பாட்டம்.

4:40 pm: உண்ணாவிரதம் மேற்கொண்ட ஸ்டாலின் கைது

மெரினாவில் உண்ணாவிரதம் இருந்த ஸ்டாலின், துரைமுருகன், ஐ.பெரியசாமி, சக்கரபாணி உள்ளிட்ட திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

4.30 pm: ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''ஜெயலலிதாவின் ஆட்சி மலர்ந்தது'' என்றார். அதன் விவரம்: >அதிமுக அரசை கலைக்கும் எண்ணத்துடன் திமுக செயல்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேட்டி

4.10 pm: பேரவையில் திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியெற்றப்பட்டதைக் கண்டித்து மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம் தொடங்கினார். அதன் விவரம்: >மெரினா - காந்தி சிலை அருகே ஸ்டாலின் உண்ணாவிரதம்

3.40 pm: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; மீண்டும் தர்மமே வெல்லும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

3.30 pm: எதிர்க்கட்சியினரே இல்லாமல் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வெற்றி கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

3.15 pm: சட்டப்பேரவை மீண்டும் கூடியது. அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது.

3.10 pm: ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால், சபாநாயகர் அதை நிராகரித்துவிட்டார். நாங்கள் உடனே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவையில் நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். ஆனால், வருத்தம் தெரிவித்த பின்னரும் அவையில் சபாநாயகர் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசியது விரும்பத்தக்கது அல்ல. சட்டப்பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிப்போம்" என்றார். அதன் விவரம்: >பேரவைக்குள் எங்களை உதைத்து சட்டைகளை கிழித்தனர்: எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் காட்டம்

3.05 pm: சட்டப்பேரவையில் தான் தாக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

3.00 pm: பேரவையில் நடந்தவற்றை ஆளுநரிடம் தெரிவிக்கச் செல்வதாக ஸ்டாலின் தகவல். அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக குற்றச்சாட்டு.

2.50 pm: சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் அவையில் இருந்து வெளியேற மறுத்த ஸ்டாலின் உட்பட திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.

2.35 pm: பேரவையில் திமுகவினர் மற்றும் மு.க.ஸ்டாலினால் நடத்தப்பட்ட திட்டமிட்ட வன்முறை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ட்விட்டரில் கூறியுள்ளார்.

2.10 pm: சட்டப்பேரவைக்குள் தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் சட்டப்பேரவையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து சேகர் பாபு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உத்திரமேரூர் சுந்தர், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், தளி பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் காவலர்களால் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

2.00 pm: சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணா

1.50 pm: சட்டப்பேரவையில் நடைபெற்ற வன்முறைகள் கண்டிக்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். > | சட்டப்பேரவை வன்முறை கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் |

1.47 pm: கூவத்தூரில் உள்ள கோல்டன் பே தனியார் விடுதி மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விடுதியில்தான் கடந்த 8-ம் தேதி முதல் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. >அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கிய கூவத்தூர் விடுதி திடீர் மூடல்

1.29 pm: சட்டப்பேரவை மீண்டும் ஒத்திவைப்பு. திமுகவினர் ரகளையால் 3 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1.15 pm: சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு திமுகவினர் கோஷமிட்டனர். "மாற்று, மாற்று தேதியை மாற்று" என தொடர்ந்து கோஷமிட்டனர். > | திமுகவினரை வெளியேற்ற முடியாமல் அவைக்காவலர்கள் திணறல்; அவை 3 மணி வரை ஒத்திவைப்பு |

1.13 pm: பேரவையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அவைக் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.