Published : 24 Jul 2016 12:10 PM
Last Updated : 24 Jul 2016 12:10 PM

பல் துலக்கும் பிரஷ் முதல் சாப்பிடும் தட்டுவரை எம்ஜிஆர் மயம்: மதுரையில் 61 வயது விநோத ரசிகர்

எம்ஜிஆருக்கு அதிக ரசிகர்கள் கொண்ட ஊர் மதுரை. எம்ஜிஆர் ரசிகர்களை மகிழ்விக்க இங்குள்ள திரையரங்குகளில் இன்றும் மாதம் 2 முறை எம்ஜிஆர் படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த படங்க ளுக்கு இன்றைய நட்சத்திர நடி கர்கள் படங்களுக்கு இணையான வரவேற்பு, வசூல் கிடைக்கிறது. அந்தளவுக்கு எம்ஜிஆர் வாழ்ந்த நாட்களிலும் சரி, இறந்தபிறகும் சரி மதுரையில் அவரது ரசிகர்கள் அவரை ரசித்து வருகின்றனர்.

ஒரு திரையரங்கில் எம்ஜிஆர் படம் திரையிடப்பட்டால் அந்த தகவலை எல்லா ரசிகர்களுக்கும் தெரியப்படுத்துவது, அவர்களை ஒருங்கிணைப்பது, திரையரங்கு முன் கட்அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என இளம் நடிகர் ரசிகர்களுக்குப் போட்டியாகத் திகழ்கிறார் மதுரையை சேர்ந்த 61 வயது எம்ஜிஆர் ரசிகர் தமிழ்நேசன். இவர் மதுரை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம், தென்கரை கிராமம். குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர். இவர் 15 ஆண்டுகளாக மதுரை கே.கே.நகர் விடுதியில் அறை எடுத்து தங்கி யிருக்கிறார். இவர் தங்கியிருக்கும் அறை முழுவதுமே எம்ஜிஆர் படங்கள் மயமாக இருக்கின்றன.

பல் துலக்கும் பிரஷ், எழுதும் பேனா முதல் சாப்பிடும் தட்டு வரை அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்திலும் எம்ஜிஆர் நினைவாக அவரது பட ஸ்டிக்கர், படங்களை ஒட்டி வைத்துள்ளார். சுவிட்ச் பாக்ஸ், சேவிங் செட், பவுடர் டப்பா, மின் விசிறி, டி.வி., ரிமோட், புத்தகங் கள், காலண்டர், கைக்கடிகாரம் உட்பட அனைத்து பொருட்களிலும் எம்ஜிஆர் ஸ்டிக்கர், படங்களை ஒட்டிவைத்துள்ளார். அந்த காலம் முதல் தற்போதுவரை எம்ஜிஆர் படத்தின் டிக்கெட்டுகளை சேகரித்து வைத்துள்ளார். வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக்கிழமையில் எம்ஜிஆர் படத்துக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்கிறார்.

இதுகுறித்து தமிழ்நேசன் கூறியதாவது: 9-ம் வகுப்பு படிக்கும் போது வீட்டுக்குத் தெரியாமல் எங்க காட்டுல இருக்கிற பருத்தி யைப் பறித்து எடைக்குப் போட்டு அந்த பணத்தில் டி.கல்லுப்பட்டி டூரிங் தியேட்டரில் எம்ஜிஆர் நடித்த ‘முகராசி’ படம் பார்த்தேன். அன்று முதல் எம்ஜிஆர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இன்றுவரை தொடர்கிறது. எம்ஜிஆர் நடித்த 134 படங்களை பார்த்துவிட்டேன். ஒவ்வொரு படத்தையும் எத்தனை முறை பார்த்தேன் என்பதை கணக்கு வைத் துக்கொள்ள முடியாத அளவில் பார்த்துள்ளேன். எம்ஜிஆரின் அனைத்து படங்களின் பாட்டுப் புத்தகங்களையும் வைத்துள்ளேன். எல்லா படங்களின் பாடல்க ளையும் மனப்பாடமாக என்னால் பாடமுடியும். எந்தெந்த படத்தில் எம்ஜிஆர் என்னென்ன வேடங்க ளில் நடித்தார் என யோசிக்காம லேயே கூற முடியும். மதுரையில் பெரிய நடிகர்கள் படம் போட்டு நஷ்டமடைந்த திரையரங்கு உரி மையாளர்கள், அடுத்து எம்ஜிஆர் படத்தைப் போட்டு அந்த நஷ்டத் தை ஈடுகட்டுவார்கள் என்றார்.

எம்ஜிஆர் நூலகம் அமைப்பேன்

தமிழ்நேசன் கூறியது: என் ஓய்வூதியத்தில் பாதியை வீட்டுக்கு கொடுத்துவிடுவேன். மீதி பணத்தில் என்னுடைய செலவு போக எம்ஜிஆர் நினைவு நாள், பிறந்த நாட்களில் நலிவடைந்தவர்களுக்கு உதவுவேன். எம்ஜிஆர் பிறந்த நாள், நினைவு நாளில் சென்னை ராமாவரத்தில் உள்ள அவரது வீட்டுக்கும், கடற்கரையில் இருக்கும் நினைவிடத்துக்கும் செல்வேன். எம்ஜிஆரை ஒரே ஒருமுறை மட்டும் பார்த்துள்ளேன். மதுரையில் உலக தமிழ் மாநாட்டுக்கு வந்த எம்ஜிஆர் கையை தொட்டு மகிழ்ந்தேன். எம்ஜிஆர் பற்றிய புத்தகங்கள், நாளிதழ்கள் செய்திகளை சேகரித்து வைத்து வருகிறேன். அவற்றைப் பத்திரப்படுத்தி எதிர்காலத் தலைமுறையினர் எம்ஜிஆரைப் பற்றி தெரிந்துகொள்ள மதுரையில் விரைவில் ‘எம்ஜிஆர் நூலகம்’ அமைப்பது என்னுடைய திட்டம். அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x