Published : 13 Jun 2017 08:38 AM
Last Updated : 13 Jun 2017 08:38 AM

நீட், ஹைட்ரோ கார்பன், விவசாயிகள் பிரச்சினைகளில் தவறான தகவல்களை முதல்வர் கூறுகிறார்: திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

``நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளில், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல், தவறான தகவல்களை தமிழக முதல்வர் கூறி வருகிறார்” என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் உள்ள மாடன்குளத்தை தூர்வாரும் பணி திமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இப்பணி களை நேற்று பார்வையிட்ட அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீர்நிலைகளை தூர்வாரி பாதுகாக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. திமுக தற்போது எதிர்க்கட்சியாக இருந்தபோதும், எனது வேண்டுகோளை ஏற்று திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உள்ள குளங்கள், ஏரிகள், கால்வாய்களை தூர்வாரி வருகின்றனர். திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லாத தொகுதிகளில்கூட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் இப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடந்து கொண் டிருப்பது பினாமி ஆட்சி. நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் பிரச்சினை போன்றவற்றில் மத்திய அரசுக்கு போதிய அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் மத்திய அரசிடம் சொல்லியிருக்கிறோம் என தவறான தகவலை முதல்வரும், அமைச்சர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். அவை அத்தனையும் பொய்.

மத்திய அரசுடன் ஒப்பந்தம்

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, மாநில அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது பினாமி ஆட்சி என்பதற்கு இதைவிட வேறு சான்று கூறத் தேவையில்லை.

விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி தொடர்பாக மாநில அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக அரசு அதைபற்றி கவலைப்படாமல் இருக்கிறது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பை நிறைவேற்றவும் மாநில அரசு முன்வரவில்லை. செயல்படாத ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

போயஸ் கார்டனில் நடந்த சம்பவம் தொடர்பாக கருத்து கூறி, அவர்களுக்கு விளம்பரம் தர தயாராக இல்லை. இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெ.கீதா ஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் உடனிருந்தனர். பின்னர், மறைந்த தூத்துக்குடி என்.பெரியசாமி படத்திறப்பு விழாவில் பங்கேற்று ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x