Published : 19 Feb 2017 04:05 PM
Last Updated : 19 Feb 2017 04:05 PM

நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவை விதிகளின் அடிப்படையில் தமிழக ஆளுநரின் உத்தரவுக்கு ஏற்ப நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டப்பேரவை தலைவர் தனபால் நடத்தி இருக்கிறார். நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. 1952 ஜூலை 3-ம் தேதி ராஜாஜி அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கு சட்டப்பேரவையில் நடைபெற்றபோதும், 1972 டிசம்பரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி மீதான நம்பிக்கை வாக்கின்போதும், 1988 ஜனவரி 28-இல் ஜானகி அமைச்சரவை நம்பிக்கை வாக்கின்போதும் எத்தகைய முறை கடைப்பிடிக்கப்பட்டதோ, அதே முறையைத்தான் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் கடைப்பிடித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு என்பதே கிடையாது. சட்டங்களை நிறைவற்றும்போது பெரும்பாலும் குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை உறுதி செய்யப்படும். யாராவது ஒரு உறுப்பினர் எழுந்து குரல் வாக்கெடுப்பு கூடாது, டிவிசன் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அவைத்தலைவர் நிராகரிக்கக்கூடாது என்பது இதுவரை பின்பற்றப்படும் மரபாகும்.

டிவிசன் வாக்கெடுப்பு என்று அவைத்தலைவர் அறிவித்தவுடன், அவையில் வெளிப்புறம் உள்ள காத்திருப்பு வராண்டாக்களின் கதவுகள் பூட்டப்படும். பின்னர், அவையின் கதவுகள் பூட்டப்படும். பின்னர், வாக்கெடுப்பு தொடங்குகிறது என்று பேரவையின் செயலாளர் அறிவிப்பார். ஒவ்வொரு உறுப்பினரின் இருக்கைக்கு முன்னால் மேஜையில் 3 பொத்தான்கள் இருக்கும். பச்சை நிறத்தை அழுத்தினால் ஆதரவு, சிவப்பு நிறத்தை அழுத்தினால் எதிர்ப்பு, மஞ்சள் நிறப் பொத்தானை அழுத்தினால் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என பல்பு எரியும்.

ஒவ்வொரு பல்பின் கீழும் உறுப்பினரின் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். யாரெல்லாம் ஆதரித்து, எதிர்த்து ஓட்டு போட்டார்கள், நடுநிலை வகித்தார்கள் என்பது பதிவாகிவிடும். சிலநேரங்களில் பல்புகள் எரியாவிட்டால், அந்த எண்களுக்குரிய உறுப்பினர்களிடம் தாளைக் கொடுப்பார்கள், அந்தத் தாளில் அவரது பெயர், எண் எனக் குறிப்பிடுவதோடு, ஆதரவா, எதிர்ப்பா அல்லது நடுநிலையா என்பது குறித்து கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். சில நேரங்களில் அவையில் சட்டங்கள் நிறைவேற்றும்போது, தாள்களைக் கொடுத்தே வாக்குகளைப் பதிவு செய்வதற்கும் விதிகளில் இடம் இருக்கிறது.

எனவே, நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டப்பேரவையிலும் ரகசிய வாக்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x