Published : 25 Oct 2014 10:56 AM
Last Updated : 25 Oct 2014 10:56 AM

தேமுதிக மாவட்டச் செயலாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மாவட்டச் செயலாளர்களின் 3 நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். இதில், 32 மாவட்டங்களைச் சேர்ந்த 60 மாவட்டச் செயலாளர்கள் பங்கு பெற்றனர்.

அப்போது, தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் நிலவரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை மற்றும் 2016-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா கைது ஏன் என்பது குறித்த விவரங்களை மக்களிடையே கொண்டு செல்ல என்னென்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்பு அதிமுகவினரின் வன்முறையால் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தேமுதிக நிர்வாகிகள் பலர் தகவல்களை திரட்டியுள்ளனர். அது குறித்த விவரங்களை கூட்டத்தில் தெரிவித்தனர்.

அத்துடன், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுகவினர் பரப்பி வரும் தவறான தகவல்களை முறியடித்து, உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் கட்சி நிர்வாகிகள் பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, பொருளாளர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

9 தீர்மானங்கள்

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலமாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டுப்போய் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

கிரானைட் குவாரி, மணல் குவாரி, கடற்கரை தாதுமணல் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தஞ்சை, திருவாரூர், நாகை, திண்டுக்கல், ராமநாதபுரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அரசு அலுவலகங்கள், அரசு விளம்பரங்கள் மற்றும் அரசு திட்டங்களில் ஜெயலலிதாவின் படங்களை உடனடியாக அகற்ற வேண்டும் உள்பட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x