Published : 01 Oct 2014 05:48 PM
Last Updated : 01 Oct 2014 05:48 PM

திருவாரூரில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட ஆட்சியர்

திருவாரூரில் முட்புதரில் கிடந்த பச்சிளம் குழந்தையை நடைபயிற்சி சென்ற ஆட்சியர் மதிவாணன் மீட்டு மருத்துவமனையில் ஒப்படைத்தார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மா. மதிவாணன் செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபயிற்சி மேற்கொள்ள விளையாட்டுத் திடலுக்கு செல்லும் வழியில் உள்ள முட்புதரிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

காரை நிறுத்தி, குரல் வந்த திசையை நோக்கிச் சென்ற ஆட்சியர், அங்கு பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, அந்த குழந்தையை மீட்டு, மேல் சிகிச்சைக்காக தனது வாகனத்தில் எடுத்துச் சென்று திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார்.

“குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவ அறிக்கை வந்ததும், ஆதரவற்ற அந்த குழந்தை குறித்து உரிய விசாரணை நடத்தி, சமூக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்படும். பின்னர், அரசு அங்கீகாரம் பெற்ற திண்டுக்கல் காந்தி கிராமத்தில் உள்ள கஸ்தூரிபாய் குழந்தைகள் நல மையத்தில் சேர்க்கப்படும்” என ஆட்சியர் மதிவாணன் தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கண்ணபிரான், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நல்லதம்பி ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x