Published : 25 Oct 2014 02:59 PM
Last Updated : 25 Oct 2014 02:59 PM
காரைக்கால் அருகேயுள்ள திருநள்ளாறில் வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி முக்கிய இடங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் டிச. 16-ம் தேதி சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாவதை முன்னிட்டு திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் சனிபகவான் ஆலயம், நள தீர்த்தம் மற்றும் பக்தர்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சக்தி வாய்ந்த, நவீன டிஜிட்டல் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காரைக்கால் ஆட்சியர் வல்லவன் தலைமை வகித்தார். கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பழனிவேல், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளர் சண்முகசுந்தரம், திருநள்ளாறு காவல் ஆய்வாளர் மேரிகிறிஸ்டியன் பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் வல்லவன் கூறுகையில், “திருநள்ளாறில் டிச. 16-ல் நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதையொட்டி, கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போதுள்ள 32 கண்காணிப்புக் கேமராக்களை நவீன டிஜிட்டல் கேமராக்களாக மாற்றவும், கூடுதலாக கேமராக்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.60 லட்சம் செலவிடப்பட உள்ளது. மேலும், கூடுதலாக கேமரா தேவையென்றாலும், அதற்கும் நிதி ஒதுக்கீடு செய்யத் தயாராக உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT