Last Updated : 31 Aug, 2016 02:55 PM

 

Published : 31 Aug 2016 02:55 PM
Last Updated : 31 Aug 2016 02:55 PM

திருச்சி மத்திய சிறை ஐ.டி.ஐ.யில் கணினி பயில சிறைவாசிகள் ஆர்வம்: விடுதலையான பிறகு வேலை உறுதி என்று நம்பிக்கை

விடுதலையான பிறகு வேலை உறுதி என்ற நம்பிக்கையால், திருச்சி மத்திய சிறையிலுள்ள அரசு ஐ.டி.ஐ.யில் கணினி ஆபரேட்டர் பாடப்பிரிவில் சேர கைதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை கைதிகளின் மறுவாழ்வுக்காக பல்வேறு தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்திலேயே முதல்முறையாக திருச்சி மத்திய சிறையில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் கடந்தாண்டு ஐ.டி.ஐ. தொடங்கப்பட்டது.

இங்கு பிட்டர், கணினி ஆபரேட்டர், எலெக்ட்ரீஷியன், டெய்லரிங், வெல்டர் என 5 பாடப்பிரிவுகள் கற்பிக்கப் படுகின்றன. இதற்காக திருச்சி சிறையில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள மற்ற சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 8, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கைதிகளுக்கும் திருச்சிக்கு இடமாறுதல் கொடுத்து, ஐ.டி.ஐ-ல் சேர்க்கை அனுமதி அளிக்கப்படுகிறது. முதல் ஆண்டில் 168 பேர் பயின்றனர்.

இந்நிலையில், நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை, தற்போது சிறையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய நிலவரப்படி பிட்டர் பாடப்பிரிவில் 4 பேர், கணினி ஆபரேட்டர் பிரிவில் 22 பேர், எலெக்ட்ரீஷியன் பிரிவில் 5 பேர், வெல்டர் பிரிவில் 13 பேர், டெய்லரிங் பிரிவில் 14 பேர் என 58 கைதிகள் சேர்ந்துள்ளனர்.

இதுதவிர புழல்-1, புழல்-2, மதுரை, கோவை, சேலம், பாளை யங்கோட்டை, வேலூர், கடலூர் ஆகிய மத்திய சிறைகளில் உள்ள தகுதியுடைய, விருப்பமுடைய கைதிகளிடமிருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கைதிகள், கணினி ஆபரேட்டர் பாடப்பிரிவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரிகள் கூறும்போது, “சிறை வளாகத்திலுள்ள அரசு ஐ.டி.ஐ.யில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டைப் போலவே, இந்த ஆண்டும் கணினி ஆபரேட்டர் பாடப்பிரிவில் சேர கைதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்பாடப்பிரிவில் இதுவரை 22 பேர் சேர்ந்துள்ளனர்.

கணினி இயக்கக் கற்றுக்கொண்டால், விடுதலைக்குப் பிறகு எளிதில் வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளதே இதற்கு காரணம். அதேபோல, சுயதொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களில் பலர் வெல்டிங் மற்றும் டெய்லரிங் பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x