Published : 23 Aug 2014 09:01 AM
Last Updated : 23 Aug 2014 09:01 AM

திமுகவில் மீண்டும் அழகிரி? - கருணாநிதி உறுதி: ஏமாற்றத்தில் ஸ்டாலின்

அழகிரியை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் திமுகவில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக அழகிரியின் தூதரான கே.பி.ராமலிங்கத்துடன் சுமார் ஒரு மணி நேரம் திமுக தலைவர் கருணாநிதி ஆலோசனை நடத்தி னார். இதன்மூலம் எந்நேரமும் அழகிரி இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்: அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க முதல்கட்டமாக கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார். அதில் சில சங்கடங்களை மீறி அழகிரியை கட்சியில் சேர்ப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டதாம். முடிவில் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்ப்பது என்ற முடிவுக்கு வந்தார்களாம்.

இதற்கு ஸ்டாலின் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் அழகிரி, கனிமொழிக்கு எதிராக முகநூல்களில் சிலர் பிரச்சாரம் செய்வதாக இருதரப்பு ஆதர வாளர்களும் பரஸ்பரம் புகார் கூறியுள்ளனர். இதுபற்றி சம்பந்தப் பட்டவர்களை அழைத்து கருணாநிதி கண்டித்துள்ளார். இதை மறுத்த ஸ்டாலின், ‘எனது சார்பாக யாரும் முகநூலில் பிரச்சாரம் செய்வது இல்லை. எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை’ என்று விளக்கமளித் திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை ஸ்டாலின் திருமண நாள் வந்தது. வழக்கம்போல தம்பதி சகிதமாக கருணாநிதியிடம் ஆசி பெற நேரம் கேட்டிருக்கிறார். ஆனால், ‘அழகிரியை கட்சியில் சேர்க்க சம்மதம் என்றால் மட்டும் வரச்சொல்லுங்கள்’ என்று கருணாநிதி தரப்பில் கறாராக கூறப்பட்டதாம்.

இதையடுத்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின் பின்னர் அன்றைய தினம் மாலையில் கோபாலபுரம் சென்று ஆசி வாங்கி வந்திருக்கிறார்.

இதனால் அழகிரி விவகாரத்தில் ஸ்டாலின் சமாதானமாகிவிட்டதாக கருணாநிதி புரிந்துகொண்டார். இந்நிலையில் ஸ்டாலின் சென்ற பிறகு அழகிரியின் தூதராக நேரம் கேட்டு காத்திருந்த கே.பி.ராமலிங்கத்தை அழைத்து சுமார் ஒரு மணி நேரம் பேசியிருக்கிறார்.

அப்போது அழகிரியின் கோரிக்கைகளாக சில விஷயங்களை ராமலிங்கம் முன்வைத்திருக்கிறார். ‘அழகிரிக்கு மீண்டும் தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை அளிக்க வேண்டும். தென் மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் உரிமையை வழங்க வேண்டும். கனிமொழியை வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் ஆகியவைதான் அந்த முக்கியமான நிபந்தனைகள்’ என்கிறது திமுக வட்டாரம்.

இதுகுறித்து கே.பி.ராமலிங்கம், ‘தி இந்து’-விடம் கூறுகையில், “அழகிரி அண்ணனின் வேண்டுகோள்களை தலைவரிடம் கூறினேன். பதவியே கேட்காமல் இருந்த அழகிரிக்கு நீங்கள்தான் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியை கொடுத்தீர்கள். அப்போது பல தேர்தல்களில் அவர் திமுக-வை வெற்றி பெற செய்தார். இன்று பதவியை விட்டு நீக்கியது மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட ஊடகம் மூலம் அவரை தினந்தோறும் அவமானப்படுத்தி வருகின்றனர். அதை தடுத்து நிறுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டேன்.

இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை அழகிரி, தயாளு அம்மாளை சந்திக்கிறார். தொடர்ந்து எந்த நேரமும் அவர் தலைவரை சந்திக்க அழைக்கப்படலாம். விரைவில் அவருக்கான பதவியும் அறிவிக்கப்படலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x