Published : 21 Dec 2014 02:23 PM
Last Updated : 21 Dec 2014 02:23 PM

திமுகவில் ஜனநாயகம் இல்லை: பாஜகவில் இணைந்த நெப்போலியன் பேட்டி

திமுகவில் ஜனநாயகம் இல்லை என அக்கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.பி. நெப்போலியன் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவில் ஜனநாயகம் இல்லை:

"திமுகவில் எனது கடமைகளை செய்யக்கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. திமுகவில் ஜனநாயகம் என்பதே கிடையாது" என பாஜகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நெப்போலியன் தெரிவித்துள்ளார்.

திமுகவில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி. நெப்போலியன் இன்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

நெப்போலியன், திமுகவில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். சட்டப்பேரவை உறுப்பினராகவும், மத்திய இணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கே.என்.நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், மு.க.அழகிரியின் ஆதரவாளராக மாறினார் நெப்போலியன்.

திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டபோது, அவரது வீட்டுக்கே சென்று ஆதரவை தெரிவித்தார். இதனால், கட்சியில் ஓரங்கட்டப்பட்ட நெப்போலியன், அதிருப்தியில் இருந்துவந்தார். இந்நிலையில், அவரை பாஜகவுக்கு இழுக்க அக்கட்சி நிர்வாகிகள் முயன்றனர். ஆரம்பத்தில் நழுவிய நெப்போலியன், கட்சியிலும் தேர்தலிலும் முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதன் அடிப்படையில் பாஜகவில் சேர ஒப்புக் கொண்டதாக கூறப்பட்டது.

அதற்கேற்ப நேற்று சனிக்கிழமை, திமுகவில் இருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார். அதில், ‘கடந்த 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, என்னை உருவாக்கிய திமுகவில் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறேன். இதுநாள் வரை எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்திருந்தார்.

முன்னதாக இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x