Published : 18 Dec 2014 07:10 PM
Last Updated : 18 Dec 2014 07:10 PM

திண்டுக்கல் அருகே 120 அடி ஆழ்கிணற்றில் விழுந்த தம்பதியினர் போராடி மீட்பு

திண்டுக்கல் அருகே 120 அடி ஆழ்கிணற்றில் தவறுதலாக விழுந்த பெண்ணை காப்பாற்றச் சென்ற அவரது கணவரும் வெளியே வர முடியாமல் தத்தளித்தனர்.

வெல்லோடு என்ற இடத்தில் வீரம்மாள் (வயது 42) கால்நடை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறுதலாக 120 அடி ஆழ்கிணற்றில் விழுந்தார். சப்தம் கேட்டு கிணற்றின் அருகில் சென்ற கணவர் கணேசன் தன் மனைவி நீரில் மூழ்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு மனைவியை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்தார்.

"நான் உடனடியாக கிணற்றில் குதித்தேன். வீரம்மாளைக் காப்பாற்றிய போது அவர் மயக்கமடைந்திருந்தார். கிணற்றில் இருக்கும் படிக்கட்டுகள் நீர் மட்டத்தை விட அதிக உயரத்தில் இருந்ததால் படிகளை எட்டிப் பிடிக்க முடியவில்லை. என் மனைவிக்கு நீச்சல் தெரியாது, கிணற்றின் சுவற்றில் பிடி எதுவும் இல்லை.” என்று கூறினார் கணேசன்.

அந்தக் கிணறு இருந்த இடம் ஆள் அரவமற்ற இடம் என்பதால் காப்பாற்றுமாறு கணவர் கணேசன் கொடுத்த குரல் பயனற்று போனது. மயக்கமடைந்த மனைவியை தன் தோள்களில் சுமந்த படி சுமார் 1 மணி நேரம் கிணற்றுக்குள் அவர் தத்தளித்துள்ளார்.

அதன் பிறகே பண்ணைத் தொழிலாளர்கள் சிலர் கிணற்றின் பக்கமாகச் சென்ற போது சப்தம் கேட்டு கிணற்றில் குதித்தனர். அதற்குள் தீயணைப்புப் படையினரும் கிணற்றருகே வந்தனர். ஆனால் கிணற்றின் நீர்மட்டம் படிகளுக்கு மிகக் கீழே இருந்ததால் அவர்களாலும் உடனடியாகக் காப்பாற்ற முடியவில்லை.

பிறகு இரண்டு கயிர்களைக் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கி முதலில் மயக்கமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து மேலே தூக்கினர். பிறகு அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.

மீட்கப்பட்ட தம்பதியினர் உடனடியாக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x