Last Updated : 30 Mar, 2015 02:57 PM

 

Published : 30 Mar 2015 02:57 PM
Last Updated : 30 Mar 2015 02:57 PM

தமிழகத்தில் முதன்முறையாக பேருந்து நிலையத்தில் நாப்கின் வழங்கும் இயந்திரம்

தமிழகத்தில் முதன்முறையாக பேருந்து நிலையத்தில் தானியங்கி நாப்கின் வழங்கும் கருவி திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது.

திருச்சி மத்திய பேருந்து நிலைய மகளிர் கழிவறைப் பகுதியில், சுகாதார நாப்கின் வழங்கும் தானியங்கி கருவி அமைக்கப்படுகிறது. இதேபோல, பயன்படுத்தப்பட்ட நாப்கினை அழிக்கும் இயந்திரமும் பொருத்தப்படுகிறது. இதற்காக, பேருந்து நிலையத்தில் பிரத்தியேக மகளிர் கழிவறை கட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், சுகாதார நிலையங்களில் இதுபோன்ற கருவிகள் இருந்தாலும், பேருந்து நிலையத்தில் அமைக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

இது, நெடுந்தொலைவு பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பேருந்து மூலம் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். ஏற்கெனவே, பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிவறையில் நாப்கினை வீசுவதால், பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்கும் வகையில் பிரத்தியேகமாக நாப்கின் வழங்குதல் மற்றும் அழிப்பதற்காக பிரத்தியேக கழிவறையை திருச்சி மாநகராட்சி அமைத்து வருகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகர சுகாதார அலுவலர்கள் கூறும்போது, “பெண்களின் சிரமத்தைக் கருதியும், சுகாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஏற்கெனவே, மாநகராட்சியின் நகர் நல மையங்களிலும், மாநகராட்சிப் பள்ளிகளிலும் தானியங்கி நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது, முதன்முறையாக பேருந்து நிலையத்தில் இந்தக் கருவியைப் பொருத்தவுள்ளோம். தானியங்கி இயந்திரத்தில் ரூ.5 செலுத்தினால், புதிய நாப்கினைப் பெறலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x