Published : 30 Nov 2015 08:19 PM
Last Updated : 30 Nov 2015 08:19 PM

தமிழகத்தில் இருந்து இத்தனை அவதூறு வழக்குகள் ஏன்?- அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசு தொடுத்துள்ள அவதூறு வழக்குகளில் இருந்து பாதுகாப்பு கோரி மனுக்கள் கொட்டப்பட்டுவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தன் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கை எதிர்த்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பிரபுல்ல சி.பன்ட் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆட்சி நிர்வாகம் பற்றிய விமர்சனங்களை தனிநபர் மீதான அவதூறாக எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் தேமுதிக தலைவர் பேசியபோது அவதூறு செய்ததாக விஜயகாந்த் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது.

இதனை எதிர்த்து விஜயகாந்த் சார்பாக செய்யப்பட்டிருந்த மனு விசாரணையின் போது நீதிபதி மிஸ்ரா கூறும்போது, “இது போன்ற வழக்குகள் இந்த மாநிலத்திலிருந்து அதிகம் வருகின்றன... ஏன்?

இந்தக் கருத்துகள் ஆட்சி நிர்வாகம் பற்றிய கொள்கையின் மீதான விமர்சனங்கள். இதில் தனிநபருக்கு எதிராக எதுவும் இல்லை. பிறகு ஏன் இந்த குற்ற அவதூறு வழக்கு?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 499 மற்றும் 500-ம் பிரிவுகள் விமர்சனங்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்காக அல்ல என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதே நீதிபதிகள் அமர்வுதான் சமீபத்தில் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செய்த மனுக்களை விசாரித்து தீர்ப்பை தள்ளி வைத்தது. சுப்பிரமணியன் சுவாமி மீதும் தமிழக அரசு பல அவதூறு வழக்குகளை தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அவதூறு வழக்குகளை தண்டனைக்குரிய குற்றம் என்பதிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது குறித்த மனுக்கள் மீது இதே நீதிபதிகள் அமர்வு விரிவான விசாரணைகள் மேற்கொண்டது.

இது குறித்து நாடு முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் வாதிடுகையில், அவதூறு வழக்கு தண்டனைக்குரிய குற்றம் என்பது காலனியாதிக்க கால சட்டம் என்றும், ஆனால் தற்போது சுதந்திரத்துக்கு பிறகான காலக்கட்டத்தில் இந்த சட்டம் கருத்துரிமை, பேச்சுரிமையை முடக்குவதோடு நல்லாட்சிக்கு அத்தியாவசியமான உண்மை மற்றும் பொது விவாதம் ஆகியவற்றையும் முடங்கச் செய்கிறது என்று கூறினர்.

மேலும், அரசியல் சாசன சட்டம் பிரிவு 19(1)-ன் கீழ் உள்ள பேச்சுரிமைக்கு அவதூறு வழக்குகள் இடையூறு விளைவித்து வருகிறது என்று அரசியல் தலைவர்கள் பலரும் கூறியதும் இந்த விசாரணைகளின் போது நிகழ்ந்தது.

சுப்பிரமணியன் சுவாமி உட்பட காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரும் அவதூறு வழக்குகளை கடுமையாக கேள்விக்குட்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்த் மனு மீதான விசாரணையில் ‘ஏன் தமிழகத்திலிருந்து இவ்வளவு அவதூறு வழக்குகள்?’ என்று உச்ச நீதிமன்றம் வினா எழுப்பியுள்ளது.

உச்ச நீதிமன்றம் முன்வைத்த கேள்விகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், விஜயகாந்த் மீதான வழக்கு விசாரணைக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை வரும் ஜனவரி 2-ம் தேதி வரை நீட்டித்தும் அவர்கள் உத்தரவிட்டனர்.

இதனிடையே, உச்ச நீதிமன்ற விசாரணையின்போது விஜயகாந்த் தரப்பில், "மக்களின் வரிப்பணத்தை இது போன்ற வழக்குகளில் தமிழக அரசு வீணடிக்கிறது, அத்துடன், எதிர்க்கட்சிகளை செயல்படவிடாமல் முடக்கும் நோக்கத்திலேயே, தமிழக அரசு இதுபோன்ற அவதூறு வழக்குகளை அதிக எண்ணிக்கையில் தொடுக்கிறது" என்று குற்றம்ச்சாட்டப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x