Published : 01 Aug 2014 12:12 PM
Last Updated : 01 Aug 2014 12:12 PM

தமிழக முதல்வரை இழிவுபடுத்துவதா?- இலங்கை அரசுக்கு ராமதாஸ் கண்டனம்

இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தமிழக முதல்வரை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை வெளியிடப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கை பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மீனவர் பிரச்சினை தொடர்பாக வெளியாகியுள்ள கட்டுரை தமிழக முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா எழுதும் காதல் கடிதங்கள் எந்த அளவுக்கு அர்த்தமுள்ளவை? (How meaningful are Jayalalitha's love letters to Narendra Modi?) என்று மிகக் கீழ்த்தரமான ரசனையுடன் அந்தக் கட்டுரைக்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியை நினைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவதைப் போல அக்கட்டுரையுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ள படம் மனசாட்சி உள்ள அனைவரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதலமைச்சரை இழிவுபடுத்தும் வகையிலான இலங்கை அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியேற்ற பின் இதுவரை 15-க்கும் மேற்பட்ட முறை தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. பல முறை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. சிங்களப் படையினரின் இந்த செயலை தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் அவரது பங்கிற்கு இதுபற்றி பிரதமருக்கு இதுவரை 11 முறை கடிதம் எழுதியிருக்கிறார்

முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை இலங்கையில் உள்ள ஊடகங்கள் விமர்சித்தால் கூட அதை கருத்து சுதந்திரம் என்ற அடிப்படையில் அனுமதிக்கலாம். ஆனால், இலங்கை அரசுத்துறை இணையத்தளத்தில், அதிலும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டு பாதுகாப்புத்துறையின் இணையதளத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்டை நாட்டின் முதலமைச்சரின் செயல்பாட்டை விமர்சித்து கண்ணியமற்ற மொழியில் கட்டுரை எழுதப்படுவது சரியா? இது இந்திய இறையாண்மையில் குறுக்கிடும் செயல் ஆகாதா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

மீனவர்கள் பிரச்சினை உட்பட தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை முதல்வர் ஜெயலலிதா கையாளும் முறை தொடர்பாக எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. இன்னும் கேட்டால் ஜெயலலிதா அரசின் தவறுகளை, மற்ற கட்சிகளின் தலைவர்களைவிட நான் தான் மிக அதிகமாக விமர்சனம் செய்திருக்கிறேன். விமர்சனங்கள் ஒருவரின் தவறைச் சுட்டிக்காட்டி திருத்தும் வகையில் இருக்க வேண்டுமே தவிர, இழிவுபடுத்தும் வகையில் இருக்கக் கூடாது. ஆனால், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பான உள்நாட்டு பிரச்சினையில், இலங்கை அரசு தேவையில்லாமல் கருத்து தெரிவிப்பது மட்டுமின்றி, பெண் என்றும் பாராமல் முதலமைச்சரை இழிவுபடுத்துவது முறையல்ல.

இலங்கை இணையதளக் கட்டுரையின் தலைப்பு தமிழக முதலமைச்சரை மட்டுமின்றி, பிரதமரையும் இழிவுபடுத்துவதைப் போல அமைந்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியை தங்களுக்கு நெருக்கமானராகவும், அவரிடம் தமிழக அரசின் முயற்சி பலிக்காது என்பது போன்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றிருப்பது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிரான கட்டுரைகளும், கருத்துப்படங்களும் இலங்கை அரசு இணையதளத்திலும், ஊடகங்களிலும் வெளியாவது இது முதல்முறையல்ல. 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்குப் பிறகு, அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை கடுமையாக விமர்சித்து இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சரையும், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்புபடுத்தி மிகவும் மட்டமான ரசனையுடன் ‘லக்பிம’ என்ற ஊடகத்தில் கருத்துப்படம் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து இப்போது தமிழக முதலமைச்சரை கொச்சைப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

பாரதியஜனதாவைச் சேர்ந்த சுப்பிரமணியசாமி, சேஷாத்ரி சாரி போன்றவர்கள் ராஜபக்சேவின் விருந்தினர்களாக சென்று, இந்திய அரசின் ஏகபோக பிரதிநிதிகளைப் போன்று தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருவது தான், இத்தகைய கட்டுரைகளை வெளியிடும் அளவுக்கு இலங்கை அரசுக்கு துணிச்சலைத் தந்திருக்கிறது. இலங்கையின் இத்தகைய தரம் தாழ்ந்த, நச்சுத்தன்மைக் கொண்ட, அருவருக்கத்தக்க போக்கை இனியும் அனுமதிக்கக் கூடாது.

இதற்காக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை இந்திய வெளியுறவுத்துறை உடனடியாக அழைத்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்; இக்கட்டுரைக்காக இலங்கை அதிபரும், இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளரும் மன்னிப்பு கேட்கும்படி மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். மன்னிப்பு கேட்க இலங்கை அரசு மறுத்தால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ளவும் இந்திய அரசுத் தயங்கக்கூடாது". இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x