Published : 01 Aug 2014 08:53 PM
Last Updated : 01 Aug 2014 08:53 PM

தமிழக முதலமைச்சர் பற்றி இலங்கை அவதூறு கட்டுரை: கருணாநிதி கண்டனம்

இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்களை இழிவு படுத்தும் விதமாக இலங்கை அரசு இணையதளம் கட்டுரை வெளியிட்ட விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

இலங்கை சிங்களவாத அரசின் பாதுகாப்புத் துறையின் அதிகாரப் பூர்வமான இணைய தளத்தில், தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில், தமிழக முதல் அமைச்சரை அநாகரிகமாக இழிவு படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளதாக இன்று மாலை ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன.

அ.தி.மு.க. தலைவருக்கும், நமக்குமிடையே எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அவர் தமிழக மீனவர்களின் இன்னல்களைக் களையும் விதத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதங்களைக் கொச்சைப்படுத்தும் அளவுக்கு சிங்கள அரசினர் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதிலிருந்து சிங்கள அரசின் நடவடிக்கைகள் எப்படிப்பட்டவை என்பதை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக இதுபோன்ற இழிவான விமர்சனங்களை தி.மு.க. எப்போதுமே ஆதரிப்பதுமில்லை. அந்தக் கடுமொழிகளை, இழிமொழிகளைக் கண்டிக்கத் தவறியதும் இல்லை. அப்படிப்பட்ட சிங்கள அரசுக்கு ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்ளக் கூடாது என்று தான் தமிழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சியினரும் தொடர்ந்து மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறோம். அந்தக் கட்டுரை இழிவு படுத்தியிருப்பது தமிழக முதல்அமைச்சரை மட்டுமல்ல; இந்திய நாட்டுப்பிரதமரையும்தான் இழிவுபடுத்தியிருக்கிறது என்ற எண்ணத்தோடு, இந்தப் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு தன்னுடைய கடுமையான கண்டனத்தை இலங்கை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x