Published : 30 Oct 2014 05:28 PM
Last Updated : 30 Oct 2014 05:28 PM

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு தலையிட வைகோ, ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு கொழும்பு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு அவர்களை மீட்க வேண்டும் என்று வைகோ, ராமதாஸ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.



இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மீனவர்கள் 5 பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.



2011, நவம்பர் 28-ஆம் தேதி ராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, அப்போது சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால், போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது.



மீனவர்களை விடுதலை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.



இலங்கையில் நீதித்துறை என்பது ராஜபக்சவின் கைப்பாவையாகத்தான் செயற்பட்டு வருகின்றது. தமிழக மீனவர்கள் 578 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சித்ரவதைகள் செய்து சிறையில் அடைத்து வைப்பதும், மீனவர்களின் உயிர் உடமைகளைப் பறிப்பதும் சிங்களக் கடற்படைக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. இதன் உச்சமாகத்தான் இப்போது, நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.



1934-ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் எந்த நீதிமன்றமும் தூக்குத் தண்டனை தீர்ப்பு அளித்தது இல்லை. தற்போது தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்து இருப்பதற்கு, தமிழ் இனத்தின் மீது ராஜபக்ச கொண்டு இருக்கின்ற வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம்.



தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, தூக்குத் தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு ராஜபக்ச கூட்டத்திற்குத் திமிரும் நெஞ்சழுத்தமும் ஏற்பட்டுள்ளதற்கு இந்திய அரசுதான் காரணம். முந்தைய காங்கிரஸ் அரசைப் போலவே, ஏன் அதைவிட ஒருபடி மேலே சென்று பாரதிய ஜனதா அரசு தமிழர்களுக்கு எதிரான வன்மத்தைக் கடைபிடித்து வருகின்றது.



ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சவுடன் கை குலுக்குவதும், இலங்கை அரசியல் உறவு பற்றிச் சிலாகிப்பதும் பா.ஜ.க. சார்பில் சில முகவர்களை அனுப்பி ராஜபக்சவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தொடர்கின்றது. இந்திய அரசின் சார்பில் ராணுவ அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்து சிங்கள ராஜபக்ச அரசைப் புகழ்ந்து உரைப்பதும், பொருளாதார ஒப்பந்தங்களை வலுப்படுத்துவதும் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன. இதன் எதிரொலியாகத்தான் இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து இருக்கின்றது.



இந்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூக்குத் தண்டனையை இரத்து செய்து ஐந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.



ராஜபக்சவை மோடி எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்



இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கைக்கு ஹெராயின் போதைப்பொருள் கடத்தி வந்தாகக் கூறி கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. பொய்யான குற்றச்சாட்டின் பேரில் அப்பாவி மீனவர்களை கைது செய்து, அதற்குத் தேவையான சாட்சியங்களை ஜோடித்து அதனடிப்படையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.



தமிழக மீனவர்களுக்கு இந்திய அரசின் சார்பில் வழக்கமான சட்ட உதவிகள் கூட வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.



தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்களை கைது செய்து அவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் அளவுக்கு இலங்கை சென்றிருப்பது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் ஆகும்.



இந்தியாவுக்கு இணையான வலிமை கொண்ட வேறு ஏதேனும் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிருந்தால், அந்த நாடுகள் இலங்கை மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கும். ஆனால், இந்தியக் குடிமகன்கள் 5 பேருக்கு இத்தகைய அநீதி இழைக்கப்படுவதைத் தடுப்பதற்குக் கூட இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்த வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.



இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு ராஜபக்ச அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்படுவர் என ராஜபக்ச அறிவித்திருந்தார். அப்போது போதைப்பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், கடைசி நேரத்தில் இலங்கை அரசின் சதி காரணமாக அவர்கள் விடுவிக்கப்படுவது தடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட இலங்கையை இந்தியாவின் நட்பு நாடு என்று கூறிக் கொண்டு தொடர்ந்து பாதுகாத்து வந்ததால் ஏற்பட்ட துணிச்சலின் காரணமாகத் தான் 5 தமிழரை பலியிட இராஜபக்சே துணிந்திருக்கிறார்.



தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து நவம்பர் 19 ஆம் தேதி வரை மேல்முறையீடு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர்களைக் காப்பாற்ற முடியும்.



பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சரப்ஜித் சிங்குக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்த போது, மத்திய அரசு தலையிட்டு அவருக்கு சட்ட உதவிகளை வழங்கியதுடன், அவரை விடுவித்து மீட்டு வருவதற்காக நடவடிக்கை எடுத்தது. அதேபோல், 5 தமிழர்களின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது அவர்கள் சார்பில் வாதாட இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர்களை நியமிப்பது உள்ளிட்ட அனைத்து வகை சட்ட உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.



அதுமட்டுமின்றி, 5 மீனவர்களையும் காப்பாற்ற தூதரக ரீதியிலான உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு குடிமகன்களுக்கு மற்ற நாடுகள் தூக்குத் தண்டனை விதிக்கக் கூடாது என்பதில் பல நாடுகள் உறுதியாக உள்ளன. கேரளக் கடற்பகுதியில், தமிழக மீனவர்கள் இருவரை சுட்டுக் கொன்ற இத்தாலிக் கடற்படையினரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும்படி மத்திய அரசு வலியுறுத்திய போது அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.



அதேபோன்று, தமிழக மீனவர்கள் 5 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து உடனடியாக இந்தியா அனுப்பி வைக்கும்படி இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக எச்சரிக்க வேண்டும்.



தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்த ஐவர் தவிர தமிழகத்தைச் சேர்ந்த சந்திரன், பாலமுருகன், மாரி, ஜீவா, தணிகாச்சலம், ராமேஸ்வரம், மனோகர், சரவணன், செந்தில் ஆகிய மேலும் 9 மீனவர்கள் இதே குற்றச்சாற்றின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x