Published : 25 Mar 2015 10:18 AM
Last Updated : 25 Mar 2015 10:18 AM

தமிழக பட்ஜெட் 2015-16: முக்கிய அம்சங்கள்

விவசாயத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, புதிய வரிகள் ஏதும் இல்லாத தமிழக அரசின் 2015-16 பட்ஜெட்டை, முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில், செல்போன், எல்இடி பல்புகள், மீன்பிடி சாதனங்களுக்கு வரிச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. | விரிவான செய்தி >தமிழக பட்ஜெட்: செல்போன், எல்இடி பல்புகளுக்கு வரிச்சலுகை |

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரித் தொகுப்பிலிருந்து கிடைத்துவந்த நிதிப் பகிர்வையும், சேவை வரித் தொகுப்பிலிருந்து கிடைத்து வந்த பங்கையும் குறைத்திருப்பதன் மூலம், 14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதியை இழைத்துள்ளது என பட்ஜெட் உரையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். | விரிவாக படிக்க >தமிழகத்துக்கு அநீதி இழைத்துவிட்டது 14-வது நிதி ஆணையம்: முதல்வர் ஓ.பி.எஸ். |

பட்ஜெட்டுக்கான நிதி ஆதாரங்களில் சொந்த பலத்தையே எதிர்காலத்தில் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர். 2015-2016 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள செலவினங்களை மேற்கொள்ளவதற்கான நிதி ஆதாரங்கள் குறித்து அவர் அளித்த விளக்கம்:>'நிதி ஆதாரங்கள்: சொந்த பலத்தை நம்பும் நிலையில் தமிழகம்'

வேளாண் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.6,613.68 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், 5,500 கோடி ரூபாய் அளவிற்கு பயிர்க்கடன் வழங்குவதை இலக்காகக் கொண்டு கூட்டுறவு அமைப்புகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க - >வேளாண் துறை நிதி ஒதுக்கீட்டை உயர்த்தியது தமிழக அரசு |

தற்போது மின்சாரப் பயன்பாட்டிற்கான தேவை கணிசமான அளவு உயர்ந்துள்ளபோதிலும், மின் தேவைக்கும் மின் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளி பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது என்றும், சூரிய ஒளி சக்தி உள்ளிட்டபுதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார். | மின் துறை குறித்து விரிவாகவாசிக்க>புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: பட்ஜெட்டில் ஓபிஎஸ் பெருமிதம் |

பள்ளிக் கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். | பள்ளி, உயர் கல்வி தொடர்பான அறிவிப்புகள்:>பள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலைக்கு செல்லும்: ஓபிஎஸ் நம்பிக்கை |

தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாகவும், பட்ஜெட் உரையிலும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேரவையில் வெகுவாக பாராட்டிப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம். | வாசிக்க - >மீண்டும் முதல்வராக பதவியேற்பார் ஜெயலலிதா: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் உறுதி |

தமிழக பட்ஜெட் 2015 - 16-ன் முக்கிய அம்சங்கள்:

* மாநிலத்தின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டுகளில் உயரவில்லை. இதற்கு பொருளாதார தேக்க நிலையே காரணம்.

* மத்திய அரசின் உதவிகள் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

* உலக பொருளாதார மந்த நிலையில் தமிழகத்துக்கும் பாதிப்பு.

* 14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது.

* மாநிலங்கள் சொந்த நிதியில் இயங்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது.

* 2015-16 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.55,100 கோடி.

* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில் ரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

* ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி ஒதுக்கப்படும்.

* கிராமப்புற வறுமையை ஒழிக்க தகுதியான குடும்பங்கள் கண்டறியும் பணி விரைவில் நிறைவு பெறும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

* மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் காவல்துறை சிறப்பாக பேணி பாதுகாத்து வருகிறது.

* காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு கட்டடங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைத்துறை கட்டமைப்பை மேம்படுத்து ரூ.227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு நடவடிக்கை.

* சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.

* வேளாண் துறைக்கு ரூ.6613.68 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை இல்லாத அளவு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5500 கோடி வழங்க இலக்கு. கடந்த நிதியாண்டைவிட பயிர்க்கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

* முறையாக கடன் செலுத்துபவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும்.

* சாதாரண நெல் குவிண்டால் ரூ.50, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70 மானியம் வழங்கப்படும்.

* கால்நடை பராமரிப்புக்கு முக்கியத்துவம். விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* 12,000 கறவைப் பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.

* புதிதாக 25 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்படும்.

* கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.

* மீன்வளத் துறைக்கு ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு.

* மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.

* மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.

* பொது விநியோக திட்டத்தில், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு.

* உணவு தானிய சந்தை விலை கட்டுப்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

* நதி நீர் இணைப்புக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது.

மின்சாரம்:

* மின் துறை தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

* 24.6.2014 வரை அதிகபட்ச மின் தேவையான, 13,775 மெகாவாட் மின் தேவையை மாநிலம் நிறைவு செய்துள்ளது.

* புதிய மின் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.

* மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பித்தக்க மின்சார உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்.

* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.8828 கோடி நிதி ஒதுக்கீடு.

* வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு.

* டீசல் மானியங்களுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

* மாணவ, மாணவி இலவச பயணத்துக்காக ரூ.480 கோடி ஒதுக்கீடு.

* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5422 கோடி நிதி ஒதுக்கீடு.

* நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3926 கோடி நிதி ஒதுக்கீடு.

குக்கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தில் மேலும் 60,000 வீடுகள் கட்டப்படும். அதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்.

* ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* சென்னை மாநகர வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.

* மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு. இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக இயக்கப்படும்.

* ஏழை கர்ப்பிணிப் பெண்கள் நிதியுதவி திட்டத்துக்கு ரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.

* 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

* அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.

* பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.

* அன்னதான திட்டம் தமிழகம் முழுவதும் மேலும் 206 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

* 12,609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

* பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்படும்.

* மேலும் 6.62 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.

* விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.

* இலவச மடிக் கணினி திட்டத்துக்கு ரூ.1100 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறுபான்மையினர் நலன் காக்க ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு.

* இலங்கை தமிழர் நலனுக்கு ரூ.108 நிதி ஒதுக்கீடு.

* நேரு விளையாட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கு 12 கோடி ரூபாயில் விளையாட்டு வளாகம்

* வரி வருவாயின் வளர்ச்சி மந்தமாக இருக்கிறது.

புதிய வரி விதிப்பு இல்லை:

* புதிய வரிகள் விதிக்க வேண்டாம் என அரசு முடிவு செய்துள்ளது.

* மதிப்புக்கூட்டு வரியில் உள்ள 3% உள்ளீட்டு வரி திரும்பப் பெறப்படும்

* உயிரி எரிபொருள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம் மீதான வரி விலக்கப்படும்.

* கொசுவலைகளுக்கான மதிப்புக்கூட்டுவரி விலக்கிக் கொள்ளப்படுகிறது.

* ஏலக்காய் மீதான வரி 2% குறைப்பு

* மீன்பிடி கயிறுகள், மிதவைகளுக்கான மதிப்புக்கூட்டு வரி ரத்து

* செல்போன்கள் மீதான மதிப்புக்கூட்டு வரி 14.5%-ல் இருந்து 5% ஆக குறைப்பு.

* எல்.ஈ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5% ஆக குறைப்பு

* வரிக்குறைப்பு மூலம் அரசுக்கு ரூ.650 கோடி இழப்பு.

மோட்டார் பங்குகள், உதிரி பாகங்களுக்கான வரி 5% குறைப்பு.

* வணிக வரி வசூல் இலக்கு ரூ.72,608 கோடி.

தமிழக பட்ஜெட் உரை நிறைவு.

திமுக வெளிநடப்பு:

அவை கூடியதும், பட்ஜெட் உரையை ஒத்திவைத்துவிட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு பேரவை தலைவர் அனுமதி அளிக்காததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

27-ல் மீண்டும் கூடும்:

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்த பிறகு, பேசிய அவைத்தலைவர் அவை மீண்டும் 27-ம் தேதி கூடும் என அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x