Published : 21 Apr 2014 01:06 PM
Last Updated : 21 Apr 2014 01:06 PM

மீனவர்களுக்கு தனி அமைச்சகம்: ராமநாதபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி உறுதி

காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

ராமநாதபுரத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:

பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு திட்டம் கொண்டுவந்த காமராஜரை இந்தப் பொதுக் கூட்டத்தில் முதலாவதாக நினைவு கூருகிறேன்.

ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் அதிகமாக வாழும் மாவட்டம். மீனவர் நலனில் காங்கிரஸ் கட்சி அக்கறை கொண்டுள்ளது. மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்போது மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும். அது போலவே தமிழக மீனவருக்கு இலங்கை கடற்படை யால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கடந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில், வறுமைக் கோட்டுக்கு கீழே இருந்தவர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. 15 கோடி மக்களை வறுமை நிலையில் இருந்து மீட்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பெண்கள் வெகுவாக எழுச்சி கண்டுள்ளனர். 100 நாள் வேலைத் திட்டம் அதற்கு வழி செய்துள்ளது. குறிப்பாக, இத்திட்டம் மூலம் தமிழகப் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். அதுபோலவே உணவுப் பாதுகாப்புத் திட்டத்தால் அடைந்த நன்மைகள் ஏராளம்.

தகவல் அறியும் உரிமை சட்டம்

காங்கிரஸ் ஒவ்வொரு குடிமக்களுக்கும் அரசியல் தகவல் களை தர நினைத்தது. இதனால் தகவலை அறியும் உரிமையை அளித்தது. இதன்மூலம் மக்கள் அனைத்து தகவல்களையும் பெற உரிமை பெற்றுள்ளனர்.

ரூ.72,000 கோடி கடன் ரத்து

காங்கிரஸ் ஆட்சியில்தான் விவசாயிகளின் கடன் ரூ.72,000 கோடி ரத்து செய்யப்பட்டது. மேலும் வேளாண் துறைக்கு அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பெண்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் பஞ்சாயத்து தேர்தலில் 50% இடஒதுக்கீடு அளித்தது. மேலும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கவே காங்கிரஸ் விரும்புகிறது. ஆனால், அதனை பாஜக நிறைவேற்ற விடவில்லை. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் 25% இடஒதுக்கீடு வழங்கப்படும்.

மேட் இன் தமிழ்நாடு

நீங்கள் பயன்படுத்தும் பொருள்கள் அனைத்தும் சீனத் தயாரிப்பாகவே இருக்கிறது. இதில் ஏன் நமது பங்கு இல்லை. நாம் உபயோகிக்கும் பொருள்கள் நமது உற்பத்தியாக இருக்க வேண்டும். நமது பொருள்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும். அது, தமிழர்களால் உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும்.

நமது இளைஞர்கள் லண்டன், அமெரிக்கா செல்லும்போது அங்கு கடிகாரம், கேமரா, காலணிகள் என எதை எடுத்தாலும் 'மேட் இன் தமிழ்நாடு, மேட் இன் இந்தியா' என்று பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்காக விரைவில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் பல வர உள்ளன. பல லட்சம் தமிழக இளைஞர்கள் இதன்மூலம் வேலைவாய்ப்பு பெறுவர்.

காங்கிரஸ் மீண்டும் ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம் கிடைக்க வழிவகுக்கும் இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x