Published : 30 Sep 2014 08:13 AM
Last Updated : 30 Sep 2014 08:13 AM

டீ மாஸ்டர் இந்திய பிரதமர்.. டீக்கடை உரிமையாளர் தமிழக முதல்வர்..: உழைப்பால் உயர்ந்த ஓ.பன்னீர்செல்வம்

ஒரு காலத்தில் டீ மாஸ்டராக இருந்த மோடி இப்போது இந்தியாவின் பிரதமர். அதுபோல, டீ கடை உரிமையாளரான ஓ.பன்னீர்செல்வம் இப்போது தமிழகத்தின் முதல்வர் ஆகி இருக்கிறார்.

பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ஸின் பூர்வீக வீட்டுக்கு அருகிலேயே அவரு டைய ‘பி.வி. கேண்டீன்’ (பன்னீர்செல்வம் - விஜயலெட்சுமியின் சுருக்கம்). 1990-க்கு முன்புவரை ஓ.பி.எஸ் அதிகாலை 4 நான்கு மணிக்கே எழுந்து டீ கடைக்கு கிளம்பிவிடுவார். இரவு 10 மணிக்கு மேல்தான் ஓ.பி.எஸ்-ஸை மறுபடியும் வீட்டில் பார்க்க முடியும்.

டீக்கடையில் சில நேரங்களில் கடைபையன்கள் வராவிட்டால் அவர்கள் பணிகளையும் கவுரவம் பார்க்காமல் ஓ.பி.எஸ்-ஸே பார்த்துவிடுவார். அந்த உழைப்பும் பணிவும்தான் அவரை உயர்த்தி இருக்கிறது.

இப்போதும் இயங்கிக் கொண்டிருக் கிறது பி.வி. கேண்டீன். இப்போது அதன் நிர்வாக பொறுப்பை அவரது தம்பி ஓ.ராஜா கவனிக்கிறார்.

தொடக்கத்தில் பெரியகுளம் அதிமுக வட்டச் செயலாளராக இருந்தவர் 1993-ல் நகரச் செயலாளராக உயர்ந்தார் ஓ.பி.எஸ். 1996-ல் பெரியகுளம் நகர்மன்ற தலைவ ரானார். 1998 நடாளுமன்றத் தேர்தலின் போது டி.டி.வி.தினகரன் பெரியகுளம் தொகுதி வேட்பாளராக வந்தது இவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான மைல்கல். அதற்குப் பிறகு, மாவட்டச் செயலாளர், பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அமைச்சர் என அடுத்தடுத்து உயர்வு கண்ட ஓ.பி.எஸ்., 2001 செப்டம்பர் 21-ல் ஜெயலலிதாவால் தமிழக முதல்வராகவும் அமர்த்தப்பட்டார்.

அசைவ சாப்பாட்டின் அலாதி பிரியர். ஆனால், 1996-ல் சேர்மனான பிறகு, இவரும் இவரது மனைவி விஜயலெட்சுமி யும் அசைவத்தை துறந்தார்கள். இப் போது, இவரது வீட்டில் அசைவ சாப்பாடே சமைப்பதில்லை. செண்டிமென்ட் பார்ப்பதில் ஜெயலலிதாவுக்கு சற்றும் குறைவில்லாதவர் ஓ.பி.எஸ். நல்ல நேரம் பார்த்துதான் வீட்டை விட்டு வெளியில் கிளம்புவார். தொடர்ந்து 22 வருடங்களாக சபரிமலைக்கு இருமுடி சுமக்கிறார்.

சென்னையிலிருந்து பெரியகுளம் கிளம்புவதாக இருந்தால் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில்தான் பயணம். இரவு 9.20 மணிக்கு பாண்டியன் கிளம்பும். செங்கல்பட்டு தாண்டிய பிறகுதான் இரவுச் சாப்பாடு. அதிகாலை நாலரை மணிக்கு பாண்டியன் திண்டுக்கல் ஸ்டேஷனை தொடும். அதற்காக 4 மணிக்கே எழுந்துவிடுவார் ஓ.பி.எஸ். திண்டுக்கல் ஸ்டேஷனில் இருந்து ஒன்றரை மணி நேர கார் பயணம் பெரியகுளம் வந்துவிடும். வீட்டுக்குப் போனதும் குளித்து முடித்து, காலை 7 மணிக்கெல்லாம் டூர் கிளம்ப தயாராகிவிடுவார்.

`அண்ணே சாப்பாடு..’ என்று கட்சியினர் கேட்டால், `டைம் ஆச்சு.. போற வழியில பாத்துக்கலாம்பா’ என்று சொல்லி காரைக் கிளப்பச் சொல்லிவிடுவார். பெரும்பாலும், பயணத்தின்போது தயிர் அல்லது லெமன் சாதம்தான் ஓ.பி.எஸ்-க்கு வழித்துணை. வழியில் எங்காவது மரத்து நிழலில் காரை நிறுத்தச் சொல்லி சாப்பாட்டை முடித்துவிடுவார். அவர் சில நாட்களில் 1,000 கிலோ மீட்டர் வரைகூட காரில் பயணம் செய்வதுண்டு.

கடந்த முறை முதல்வராக பதவி ஏற்றபோது ஜெயலலிதா உடன் இருந்தார். இந்த முறை ஜெயலலிதா சிறையில் இருக்க, அவர் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டிய இறுக்கமான சூழல். பதவி ஏற்புக்கு முதல் நாள் இரவு, ’இந்தப் பதவியை நான் ஏற்கத்தான் வேண்டுமா?’ என்று கேட்டு வெகுநேரம் அழுது கொண்டிருந்தாராம் ஓ.பி.எஸ். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் மருத்துவரை வரவழைத்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

காலையில் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு அவரை அழைத்துச் செல்ல அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வந்திருந்தார். அவ ரோடு காரில் ஏறும்போதும் குலுங்கி அழுதார் ஓ.பி.எஸ். `என்ன அண்ணே பண் றது. சட்டமும் விதியும் அப்படி இருக்கே.. வாங்க வந்து காருல ஏறுங்க’ உடன் இருந் தவர்கள் சொன்ன இந்த வார்த்தைகள் அவரை சமாதானப்படுத்தவில்லை. பதவி ஏற்பு உறுதிமொழியை வாசித்தபோதும் ஓ.பி.எஸ்-ஸுக்கு நா தழுதழுத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x