Last Updated : 19 May, 2015 12:23 PM

 

Published : 19 May 2015 12:23 PM
Last Updated : 19 May 2015 12:23 PM

ஜெயலலிதாவை சந்திப்பீர்களா?- ராமதாஸை சந்தித்த ஸ்டாலின் பதில்

ஜெயலலிதாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, "முதலில் முன்னாள் முதல்வர் ஜெயலிதா தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும் பிறகு அவரை சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுப்பது பற்றி யோசிக்கலாம்" என மு.க.ஸ்டாலின் தைலாபுரத்தில் தெரிவித்தார்.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், தனது சகோதரர் மகனின் திருமண அழைப்பிதழை பல்வேறு அரசியல் தலைவர்களையும் சந்தித்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை காலை 10.45 மணிக்கு திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸின் இல்லத்துக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் முதன் முறையாக வந்தார். ஸ்டாலினை வாசலுக்கே வந்து வரவேற்றார் ராமதாஸ்.

பின்னர் தன் சகோதரர் மகன் திருமண அழைப்பிதழை ராமதாஸிடம் அளித்துவிட்டு ஸ்டாலின் திரும்பினார்.

அப்போது. செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், "வடநாட்டில் நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பண்பாட்டை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களையும் சந்தித்து அழைத்து வருகிறோம்" என்றார்.

திமுக போட்டியிடுமா?

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு "முதலில் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கட்டும். அதன் பின்னர் திமுக உயர்மட்ட குழு கூடி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கும்" என கூறினார்.

ஜெயலலிதாவை சந்திப்பீர்களா?

முன்னாள் முதல்வருக்கும் நேரில் திருமண அழைப்பிதழ் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு "முன்னாள் முதல்வரா? மக்கள் முதல்வரா? என திருப்பி கேட்டுவிட்டு முதலில் அவர் தன் கட்சிக்காரர்களை சந்திக்கட்டும். பிறகு யோசிக்கலாம்" என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் திமுகவினர் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x