Published : 19 Oct 2014 08:17 PM
Last Updated : 19 Oct 2014 08:17 PM

ஜெயலலிதாவின் ஜாமீன் விடுதலைக்கு வருத்தப்படவில்லை: கருணாநிதி

"சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை" என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக 'ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்' என்ற தலைப்பில், அவர் வெளியிட்டுள்ள கடித வடிவிலான அறிக்கையில், பதினெட்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களிலும் இழுத்தடிக்கப்பட்டுக் காலம் கடத்தப்பட்டு வந்த ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியன்று தீர்ப்பளிக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனாலும் குற்றஞ்சாட்டப்பட்டோர் தங்களின் பாதுகாப்புக் கருதி, தீர்ப்பினை செப்டம்பர் 27ஆம் தேதிதான் வெளியிட வேண்டு மென்று கோரிக்கை வைத்து, அதையும் நீதிபதி ஏற்றுக்கொண்டு, செப்டம்பர் 27ஆம் தேதியன்றே தீர்ப்பினை அளித்தார்.

அந்தத் தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு நூறு கோடி ரூபாய் அபராதமும், நான்காண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.மேலும் சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா பத்துக் கோடி ரூபாடீநு அபராதமும் விதிக்கப்பட்டது.

இதற்கான ஆதாரங்களையும், சாட்சியங்களையும் சட்ட விதி முறைகளின் அடிப்படையில் குறிப்பிட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்ஹா 1136 பக்கங்களில் விரிவான தமது தீர்ப்பில் விளக்கியிருக்கிறார்.

இந்தத் தீர்ப்பு வெளியானவுடன், அதைப் பற்றி நான் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. காரணம், இது முக்கியமான வழக்கு என்பதால், எச்சரிக்கை உணர்வுடன் பொறுமையாக இருந்து தீர்ப்பு முழுவதையும் கவனமாகப் படித்த பிறகு விளக்கலாம் என்று எண்ணினேன்.

மேலும் அ.தி.மு.க.வின் தலைவிக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது என்பதற்காக நான் மகிழ்ச்சி அடையவும் இல்லை; தற்போது அவர் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்படவும் தயாராக இல்லை.

ஆனால் அ.தி.மு.க.வினர் சிலர் நான்தான் ஏதோ ஜெயலலிதா மீது பொய் வழக்குப் போட்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழங்கிய அந்தத் தீர்ப்பில் என்னென்ன கூறப்பட்டுள்ளது என்பதை திமுக தொண்டர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகத்தான் தொடர் கடிதம் எழுதுகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x