Published : 23 Jan 2017 12:36 PM
Last Updated : 23 Jan 2017 12:36 PM
திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் அருகில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், இளைஞர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர்.
திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் அருகில் காந்தி சிலை முன்பு மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை மெரினா இளைஞர்களைப் போல நாங்களும் போராடுவோம் என்று கூக்குரலிட்டனர். காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
லேசான தடியடி
இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காவல் துறையினர் லேசான தடியடி நடத்தினர். அதேபோல் மாணவர்களும் போலீஸார் மீது தண்ணீர் பாக்கெட்டுகளை பீய்ச்சியடித்தனர்.
அப்போது மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் தற்போது திருமண மண்டபங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அரசுப்பேருந்து சேதம்
கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை அழைத்துச் செல்லும்போது, அரசுப் பேருந்தொன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதவிர திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT