Last Updated : 18 Jan, 2017 12:40 PM

 

Published : 18 Jan 2017 12:40 PM
Last Updated : 18 Jan 2017 12:40 PM

ஜல்லிக்கட்டு போராட்டம்: சேலம் ஆட்சியர் அலுவலம் அருகே 3000 பேர் திரண்டனர்; இரு மாணவர்கள் தீக்குளிக்க முயற்சி

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என சுமார் 3000 பேர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் உள்ளிட்டோர் கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சுமார் 3000 பேர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

காலை 9 மணிக்கு திரண்ட இளைஞர்கள் கூட்டத்தில், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டும், விடுப்பு எடுத்துக் கொண்டும் தன்னெழுச்சியாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர்.

தனியார் கல்லூரியைச் சார்ந்த மாணவர்கள் பூபாலன், ராஜ்குமார் ஆகிய இருவரும் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்ததோடு, தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனிருந்த சக மாணவர்களும், போலீஸாரும் அதைத் தடுத்து நிறுத்தினர்.

கார்கில் போரில் விமானப் படை வீரராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற எடப்பாடி செல்வ ராமலிங்கம், குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்ற பதக்கத்தை திருப்பி அளிப்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

இது தொடர்பாக செல்வ ராமலிங்கம் கூறியதாவது:

2000-ம் ஆண்டு கார்கில் போர் நடைபெற்ற போது நான் பஞ்சாபில் உள்ள அம்பாலா பகுதியில் சீனியர் நான் கமிஷனர் ஆபிஸராகப் பணியாற்றினேன். கார்கில் பகுதியை கைப்பற்றியதற்காக ஆப்ரேஷன் விஜய் மெடல் என்ற பதக்கத்தை குடியரசுத் தலைவர் எனக்கு வழங்கினார்.

தற்போது நான் விருப்ப ஓய்வு பெற்று கொல்லிமலை பகுதியில் 8 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன்.

(செல்வ ராமலிங்கம்)

காளை மாடுகளை தமிழர்கள் தங்கள் பிள்ளைகளைப் போல வளர்த்து வருகிறார்கள். மல்யுத்தம் என்கிற வீர விளையாட்டும் தமிழத்தில் வளர காளைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. அதனால் தமிழர்களையும், காளைகளையும் பிரிக்க முடியாது.

பீட்டா அமைப்பு சொல்வதைப் போல இதில் போதை மருந்தோ அல்லது எந்த வித துன்புறுத்தல்களோ காளைகளுக்கு இழைக்கப்படுவதில்லை. பீட்டா அமைப்பு ஜெர்சி மாடுகளை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நம் நாட்டு மாடுகளை அழிக்கும் நோக்கத்தில் செயல்படுகிறது.

நம் நாட்டு மாடுகளுக்கு இருக்கும் உடல் தகவமைப்பு, வியர்வை சுரப்பியின் தன்மை ஆகியவற்றால் ஆரோக்கியமே வளரும். அதிலிருந்து கிடைக்கும் பால் தூய்மையானதாக, தரமானதாக தாய்ப்பாலுக்கு ஈடாக இருக்கும். மூட்டு வலி உள்ளிட்ட எந்தப் பிரச்சினையும் வராது.

ஆனால், ஜெர்சி மாடுகளிலிருந்து பெறப்படும் பால் அவ்வளவு தரமாக இருக்காது.

எனவே, ஜல்லிக்கட்டுக்காக என் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக எனக்கு வழங்கப்பட்ட பதக்கத்தை திருப்பி அளிக்க வந்தேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x