Published : 27 May 2016 08:25 AM
Last Updated : 27 May 2016 08:25 AM

சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற தனி நிறுவனம் தொடக்கம்: ரூ.1,366 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்

சென்னை மாநகரத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்காக ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1,366 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் செயல்படுத்தப்படும்.

இதுகுறித்து, சென்னை மாநக ராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் ஸ்மார்ட் சிட்டி யாக மாற்றப்பட உள்ள 100 நகரங் களில் முதல்கட்டமாக 20 நகரங் களை தெரிவு செய்து கடந்த ஜனவரி 28-ம் தேதி மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத் தால் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சென்னை மாநகரம் தேர்வாகி உள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலம் தமிழக அரசு சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் ரூ.1,366.24 கோடியில் சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும். இந்த நிறுவனம் ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் செயல்படும். நிறுவனங்களின் சட்டம் 2013-ன் படி வரையறுக்கப்பட்ட நிறுவனமாக இது செயல்படும். இதில் தமிழக அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து 50 : 50 என்ற அளவில் பங்கு வகிக்கும்.

இந்நிறுவனத்தின் தலைவராக பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் செயல்படுவார். மேலும், சென்னை மாநகரின் காவல்துறை கூடுதல் ஆணையாளர் உள்ளிட்ட 13 பேர் இயக்குநராக பணியாற்றுவார்கள். சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக தரம் உயர்த்துவதன் ஒரு பகுதியாக முதல்கட்டமாக தியாகராய நகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இங்கு மின் கட்டமைப்பு, குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றுதல், மழைநீர் வடிகால், திடக்கழிவு மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம் இணைப்பு மற்றும் டிஜிட்டல் ஆக்கம், துப்புரவுப் பணிகள், பாதசாரி நடைபாதைகள், வாகனம் இல்லா போக்குவரத்து, அறிவார்ந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு, பசுமையான திறந்தவெளி பூங்காக்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான பணிகள் 2015-16-ம் நிதியாண்டில் தொடங்கி 2019-20 நிதியாண்டுக்குள் முடிக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x