Published : 24 Oct 2014 10:33 AM
Last Updated : 24 Oct 2014 10:33 AM

சென்னையில் தீபாவளி நாளில் பயங்கரம்: அடகு கடைக்காரரை கொன்று ரூ.1 கோடி நகை, பணம் கொள்ளை

விருகம்பாக்கத்தில் அடகுக்கடை உரிமையாளரை கொன்றுவிட்டு ரூ.1 கோடி மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட் டனர்.

சென்னை கே.கே.நகர் பங்காரு நாயுடு காலனியைச் சேர்ந்தவர் ஹீரா ராம் (50). ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர், விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் ‘ஆனந்த் பேங்கர்ஸ்’ என்ற பெயரில் அடகுக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ரமாபாய் (50). இவர்களுக்கு காஞ்சனா, மஞ்சு என்ற மகள்களும், ஆனந்த் (22) என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. ஆனந்த் சி.ஏ. படித்து வருகிறார்.

ஹீரா ராம் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கடையை மூட தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த 4 பேர், ஒரு நகையை கொடுத்து அடகு வைக்க வேண்டும் என்றனர். நகையை வாங்கி உரசிப் பார்த்து, எடை போட்டார் ஹீரா ராம். பின்னர் பணத்தை எடுப்பதற்காக லாக்கரை திறந்தார். அப்போது திடீரென அந்த நபர்கள், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து ஹீரா ராமின் தலையில் பலமாக 2 முறை வெட்டினர். கடைக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். லாக்கரில் இருந்த 4 கிலோ தங்க நகைகள் மற்றும் ரூ.20 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

ஹீரா ராமின் மகன் ஆனந்த், இரவு 8.30 மணிக்கு தந்தைக்கு போன் செய்திருக்கிறார். நீண்ட நேரம் அவர் போனை எடுக்காததால் சந்தேகமடைந்து, அடகுக்கடைக்கு சென்று பார்த்தார். லாக்கர் அறையில் தந்தை ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அலறித் துடித்தார். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளியில் தெரிந்தது.

தகவலறிந்ததும் தென் சென்னை போலீஸ் இணை கமிஷனர் (பொறுப்பு) திருஞானம், அசோக் நகர் உதவி கமிஷனர் ஆறுமுகம், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் விரைந்து வந்து ஹீரா ராமை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் நேற்று காலை இறந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அடகுக்கடை யில் பதிந்திருந்த கைரேகைகளை நிபுணர்கள் சேகரித்துள்ளனர். கொள்ளையடிக்கும் நோக்கத்தில் வருபவர்கள் லாக்கரில் இருக்கும் பணம் மற்றும் நகைகளை ஒன்றுவிடாமல் எடுத்துச் செல்வார்கள். ஆனால், இந்த சம்பவத்தில் லாக்கரில் கொஞ்சம் நகைகளும் பணக் கட்டுகளும் இருந்துள்ளன. இது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையிலேயே நகை, பணத்துக்காக கொலை நடந்ததா அல்லது ஏதேனும் முன்விரோதத்தில் ஹீரா ராமை கொலை செய்துவிட்டு, வழக்கை திசை திருப்புவதற்காக கொஞ்சம் நகை, பணத்தை எடுத்துச் சென்றார்களா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தீபாவளி தினத்தில் ஹீரா ராம் கடை திறந்திருப்பதை அறிந்து, ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தை கவனித்து கொள்ளை நடந்துள்ளது. எனவே, உள்ளூர்வாசிகள் யாருக்காவது இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீஸாருக்கு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x