Published : 18 Apr 2015 09:51 AM
Last Updated : 18 Apr 2015 09:51 AM
கடந்த 2014-15-ம் நிதியாண்டில் சென்னை துறைமுகம் 5.20 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளதன் மூலம், 2.81 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுகுறித்து, சென்னை துறை முகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
சென்னை துறைமுகம் கடந்த 2010-ம் ஆண்டில் இருந்து சரக்குகளைக் கையாள்வதில் தொடர்ந்து சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2014-15-ம் நிதியாண்டில் 5.2 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இதன் மூலம், 2.81 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், துறைமுகத்தின் நிதிநிலையும் மேம்பாடடைந்துள்ளது.
கடந்த 2013-14-ம் நிதியாண்டில் ரூ.173 கோடி நிதிப் பற்றாக்குறை இருந்தது. இந்நிலையில், கடந்த 2014-15-ம் ஆண்டில் துறைமுகத்தின் வருவாயில் ரூ.4 கோடி லாபம் கிடைத்துள்ளது.
பொது மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் சரக்குகளை கையாளும் திறனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆண்டொன்றுக்கு 10 கோடி டன் சரக்குகளை கையாள முடியும். துறைமுகத்தில் சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை அதிகரிப்பதற்காக பல்வேறு வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்புகளுடன் வர்த்தக கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக அரசு மற்றும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் நடத்தப்பட்ட தொடர் பேச்சுவார்த்தையின் மூலம், மதுரவாயல்-துறைமுகம் மேம்பால சாலை திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள பெரும்பாலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டு விட்டன. இந்த ஆண்டு மத்தியில் இச்சாலைத் திட்டப் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT