Published : 28 Jun 2016 03:28 PM
Last Updated : 28 Jun 2016 03:28 PM
நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் தெரிவிக்காதது ஏன் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சுவாதி படுகொலையை கண்டித்தும், கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் பாஜக சார்பில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஒரு மாதத்தில் சென்னை மாநகரில் மட்டும் 16 கொலைகள் நடந்துள்ளன. ஆனால், தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறுகிறார்.
நாள்தோறும் நடக்கும் கொலைகள், கொள்ளைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர். சுவாதி படுகொலை தமிழகம் முழுவதும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
ஆனால், இந்த கொலையைக் கண்டித்து முதல்வரோ, அமைச்சர்களோ கண்டனம் தெரிவிக்கவில்லை. சுவாதியின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை. இது வேதனை அளிக்கிறது.
மத்திய அரசு நவீன நகரங்களை உருவாக்கி வருகிறது. ஆனால், தமிழக அரசு கொலை நகரங்களை உருவாக்கி வருகிறது. மக்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். எனவே பாதுகாப்பு நடவடிக்கைகளில் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
ரவுடிகள், கூலிப்படையினரின் அட்டகாசத்தை ஒடுக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களிலும் நவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொறுத்த வேண்டும்'' என்று தமிழிசை பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT