Published : 23 Jan 2017 10:38 AM
Last Updated : 23 Jan 2017 10:38 AM

சட்டப்பேரவை இன்று கூடுகிறது; ஆளுநர் உரையாற்றுகிறார்: ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுகிறது

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர், ஆளுநர் வித்யாசாகர் ராவ் உரையுடன் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் ஜல்லிக் கட்டுக்கான சட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்முறையாக தமிழக சட்டப் பேரவை இன்று கூடுகிறது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பேரவையில் ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ் இன்று உரையாற்றுகிறார்.

முன்னதாக, பேரவைக் கூட்டத் தில் பங்கேற்க வரும் ஆளுநரை பேரவைத் தலைவர் பி.தனபால், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்கின்றனர். காலை 10 மணிக்கு பேரவை தொடங்கு கிறது. ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றி முடித்ததும் அதன் தமிழாக்க உரையை பேரவைத் தலைவர் தனபால் வாசிப்பார். அத்துடன் இன்றைய கூட்டம் நிறைவு பெறும்.

அலுவல் ஆய்வுக்கூட்டம்

அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கும். இதில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். அதன்படி, பேரவை நிகழ்ச்சிகள் நடக்கும்.

ஜெயலலிதாவுக்கு இரங்கல்

பேரவை நாளை கூடியதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் படும். அதேபோல பத்திரிகையாளர் சோ மற்றும் முன்னாள் உறுப் பினர்களின் மறைவுக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். ஜெயலலிதா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.

பின்னர் 25-ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு, அதன் மீதான விவாதம் தொடங்கும். 5 நாட்கள் வரை விவாதம் நடக்க வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசரச் சட்டங்கள்

தற்போது கொண்டுவரப் பட்டுள்ள ஜல்லிக்கட்டு அவசரச் சட்டத்துக்கான சட்டமுன்வடிவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். இது தவிர, உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்ததால், தனி அலுவலர்களை நியமித்து அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கான ஒப்புதலும் பேரவையில் பெறப்பட வேண்டும். இந்த 2 சட்டங்களுக்கான முன்வடிவும், 25-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x