Published : 22 Nov 2014 10:52 AM
Last Updated : 22 Nov 2014 10:52 AM

சட்டசபை குளிர்காலக் கூட்டத் தொடர்: டிசம்பரில் நடத்த வாய்ப்பு

தமிழக சட்டசபைக் குளிர்காலக் கூட்டத் தொடரை, டிசம்பர் இரண்டாம் வாரத்தில் நடத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் 22 நாட்கள் நடந்து, கடந்த ஆகஸ்ட் 12 அன்று, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூட்டம் 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். தற்போதைய நிலையில், ஆறு மாதக் காலக்கெடு பிப்ரவரி 12ல் முடிகிறது.

சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடர் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடருக்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், குளிர்காலக் கூட்டத் தொடரைக் கூட்ட வேண்டுமென்று, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. காவிரி நதியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டும் விவகாரம், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்பு கோருவது, தமிழக மீனவர்களைத் தொடர்ந்து சிறை பிடிக்கும் இலங்கைக் கடற்படை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து, சட்டசபையைக் கூட்டி முடிவெடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதியும், 2012ல் அக்டோபர் 10ம் தேதி முதல் நவம்பர் 1 வரையும், 2013ம் ஆண்டில் அக்டோபர் 23 முதல் ஆறு நாட்களும் குளிர்காலக் கூட்டத் தொடர்கள் நடந்துள்ளன. ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் கவர்னர் உரைக்கான கூட்டம் நடத்த வேண்டும் என்பதால், டிசம்பரில் குளிர்காலக் கூட்டத் தொடர் குறைந்தது ஒரு நாளாவது நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன என்று, அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, குளிர்காலக் கூட்டத் தொடரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு முன் 3வது வாரத்தில் கூட்டலாமா அல்லது டிசம்பர் முதல் வாரத்திலேயே கூட்டலாமா என்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்புகள் எப்போது வேண்டுமானாலும் வெளிவர வாய்ப்புள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x