Last Updated : 26 Aug, 2016 03:06 PM

 

Published : 26 Aug 2016 03:06 PM
Last Updated : 26 Aug 2016 03:06 PM

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய மேலும் 6 வாரங்களுக்கு தடை: மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 29-ம் தேதி ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பாவை கைது செய்ய மேலும் 6 வாரங் களுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில் வரும் 29ம் தேதி ஆஜராகவும் உத்தரவிட்டது.

அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி காவல் நிலையத் தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. அவரது வீட்டில் பணியாற்றிய இரண்டு பெண்கள், `தங்களைத் துன்புறுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக’ சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா ஆகியோர் மீது புகார் அளித்தனர். இதன்பேரில், அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சபை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவிருப்பதால், கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அதன் பேரில், இம்மாதம் 22-ம் தேதி வரை அவர்களைக் கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் இடைக் கால தடை விதித்திருந்தது. இந்நிலையில், முன்ஜாமீன் கோரி அவர்கள் சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற கிளை அவர்கள் மூவரும் வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், சசிகலா புஷ்பா உள்ளிட்ட மூவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர், நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா ஆஜரானார்.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம் பிரசாத்திடம், `சசிகலா புஷ்பாவை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்? அவர் ஒரு பெண் எம்பி. அவர் எங்கும் ஓடிவிடப் போவதில்லையே?’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், அவரையும் அவரது குடும்பத்தினரையும் மேலும் 6 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என்று உத்தர விட்டனர். அவர்கள் மூவரும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 29-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். அவர்களது முன்ஜாமீன் மனுமீது, உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு அளித்துள்ளதைக் கருத்தில் கொள்ளாமல் உயர் நீதிமன்றம் சுதந்திரமாக முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x