Published : 29 Aug 2014 11:19 AM
Last Updated : 29 Aug 2014 11:19 AM

கோவை, மதுரையில் துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பெறும் வகையில், ரூ.40 கோடி மதிப்பில் கோவை, மதுரையில் துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: "விளையாட்டுத் துறையில் அரசு எடுத்து வரும் முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக, 2014 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களைப் பெற்றனர். அதே சமயத்தில், துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒருவர் கூட பங்கு பெறவில்லை.

சர்வதேச அளவில் துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் பெறும் வகையில், துப்பாக்கி சுடும் பயிற்சியை பெறுவதற்கான கூடுதல் வசதிகளை இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக 28.8.2014 அன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு. நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதித் துறை அமைச்சர் இரா. வைத்திலிங்கம், மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் நடைபெற்ற விரிவான விவாதத்திற்குப் பிறகு, துப்பாக்கிச் சுடும் பயிற்சியினை இளைஞர்கள் பெறும் வகையில், 40 கோடி ரூபாய் மதிப்பில் கீழ்க்காணும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது வீராபுரத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில் மின்னணு வசதியுடன் கூடிய தடங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஊனமாஞ்சேரியில் அமைந்து உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் 18 கோடி ரூபாய் செலவில் 10 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள், 25 மீட்டர் சுடுதளத்தில் 60 தடங்கள், 50 மீட்டர் சுடுதளத்தில் 90 தடங்கள் என மொத்தம் 240 தடங்கள் அமைத்தல், இறுதிப் போட்டிக்காக, 10 மீட்டர், 25 மீட்டர் மற்றும் 50 மீட்டர் சுடுதளங்கள் ஒவ்வொன்றிலும் 10 தடங்கள் அமைத்தல் மற்றும் சுடுதளத்திற்கான கட்டடங்கள் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், 16 கோடி ரூபாய் செலவில் மின்னணு வசதிகளுடன் கூடிய ஸ்கோர் போர்டு உட்பட உலகத்தரம் வாய்ந்த நவீன துப்பாக்கி சுடுதலுக்குரிய உபகரணங்கள் வாங்கப்படும். இது தவிர, 2 கோடி ரூபாய் செலவில் டிராப் அன்ட் ஸ்கீட் தளத்திற்கான உபகரணங்கள் வாங்கப்படும்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை பகுதிகளில் உள்ள வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த இரு இடங்களில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகங்களில், தலா 2 கோடி ரூபாய் வீதம் 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒவ்வொரு வளாகத்திலும் மின்னணு வசதிகளுடன் கூடிய 15 தடங்கள் கொண்ட துப்பாக்கி சுடும் தளங்கள் அமைக்கப்படும்.

அரசின் இந்த நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பெருவாரியான துப்பாக்கி சுடும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை உருவாக்கவும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தவும் வழிவகுக்கும்" இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x