Published : 29 Apr 2017 09:25 AM
Last Updated : 29 Apr 2017 09:25 AM

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்: இந்திய கம்யூ. தேசிய செயலாளர் டி.ராஜா யோசனை

குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா எம்.பி. யோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் டி.ராஜா நேற்று கூறியதாவது:

2009-ம் ஆண்டு நடந்த இலங்கை போரில் பல லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை அரசு செய்த போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவை குறித்து சர்வதேச விசாரணை நடத்த அண் மையில் ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் பிரச்சினை எழுப்பப்பட்டது. ஆனால் விசாரணை நடத்த 2 ஆண்டுகள் அவகாசமும், வெளிநாட்டு நீதிபதிகள் மூலம் விசாரணை நடத்தக் கூடாது என்று இலங்கை கேட்டதால், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அது குறித்து இந்திய அரசின் நிலை என்ன என்பதை விளக்கவில்லை. இந்திய அரசு தார்மீக முறையில் குரல் கொடுக்க வேண்டும்.

இலங்கை ராணுவம் தாக்குவதால் இந்திய மீனவர்கள் உயிரிழக்கின்றனர். இந்திய மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க கச்சத்தீவு உடன்படிக்கையை இந்திய அரசு மறுஆய்வு செய்ய வேண்டும்.

விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராடினர். ஆனால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. விளை நிலங்களில் கெயில் குழாய்களை பதிப்பது, நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் என விவசாயிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாஜக அரசு இறங்கியுள்ளது.

இன்னும் 2 மாதங்களில் வரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தும் கருத்து உருவாகி வருகிறது. தற்போதைய சூழலில் அது அவசியம். இடதுசாரி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு உருவாகிறது. இடதுசாரிகள் ஒற்றுமை இந்தியாவுக்கு முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x