Published : 26 Apr 2015 09:47 AM
Last Updated : 26 Apr 2015 09:47 AM

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை: பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வலியுறுத்தினார்.

மத்திய திட்டக்குழுவுக்கு மாற் றாக ஏற்படுத்தப்பட்டுள்ள ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தனித்திறன் மேம்பாடு தொடர்பான கூட்டம், டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சென்றிருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு கடிதத்தையும் பிரதமரிடம் அவர் வழங்கினார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தங்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியும் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்கள் நட வடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி அமைப்பது தொடர்பாகவும் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குடிநீர் பயன்பாட்டுக்காக அணை கட்டுவதற்கு மத்திய அரசிடமிருந்து அனுமதி எதுவும் பெறத் தேவையில்லை என கர்நாடக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புதிய நீர்ப்பாசன திட்டம், நீர்மின் திட்டம், தடுப்பணைகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கு, காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பை முற்றிலும் மீறுவது போலாகும். இதனால், தமிழகத்துக்கு காவிரி நீர் வரத்து கடுமையாகப் பாதிக்கப்படும்.

தாங்கள் இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் சட்டவிரோத செயலில் ஈடுபட வேண்டாம் என்று கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்குமாறு வலியுறுத்துகிறேன். மேலும், தமிழக அரசு மற்றும் காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒப்புதல் பெறாமல் காவிரியின் குறுக்கே எந்தவிதமான திட்டங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கடுமையாக அறிவுறுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வரும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை கமிட்டியை உடனடியாக அமைக்க மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x