Published : 31 Jan 2015 10:15 AM
Last Updated : 31 Jan 2015 10:15 AM
உலகிலேயே அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் ராமேசுவரம் கடல்பகுதி கழிவு நீர் சங்கமிக்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் பக்தர்கள் தீர்த்தமாடும் அக்னிதீர்த்த கடல் மாசு அடைந்துள்ளது.
உலகம் முழுவதும் கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாக கடல் மாறி வருகிறது. கடல்வாழ் உயிரினங்களை அச்சுறுத்தும் இந்த நச்சுக்கழிவுகளால் கடல் நீர் நஞ்சாகி வருகிறது. அதுபோன்ற அச்சுறுத்தல்தான் ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் நீடிக்கிறது.
இந்தியாவில் தொன்மை வாய்ந் ததும் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தல மாகவும் ராமேசுவரம் உள்ளது. இங்குள்ள தீர்த்தங்களில் நீராடினால் பாபங்கள் போகும் என்பது ஐதீகம். இதனால் இங்கு வரும் ஏராளமான பக்தர்கள் முதலில் புனித அக்னி தீர்த்தக் கடலில் தீர்த்தமாடுகின்றனர். ஆனால் அக்னிதீர்த்தக் கடல் கழிவுகள் சங்கமிக்கும் நீர்நிலையாக மாறியுள்ளது.
ராமநாதசுவாமி கோயிலை சுற்றி உள்ள தனியார் விடுதிகள், மடங்கள், மண்டபங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப் படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் இணைப்புகள் நேரடியாக கடலிலேயே இணைக்கப் பட்டுள்ளன. இதில் வரும் கழிவுகள் அக்னிதீர்த்தக் கடலில் கலப்பதால் பாபங்களை போக்க நீராடும் பக்தர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் அக்னி தீர்த்தக் கடற்கரையில் வியாழக்கிழமை `கிரீன் டேட்டல்' எனப்படும் அரிய வகை பச்சை நிற ஆமை இறந்து கரை ஒதுங்கியது. கடந்த டிசம்பர், ஜனவரியில் இரு டால்பின்கள், இரு ஆமைகள் மற்றும் 5 கடல் பன்றிகள் என அடுத்தடுத்து அக்னி தீர்த்த கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கின.
இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதி போஸ் கூறியது: ‘‘ராமேசு வரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதி முழங்கால் அளவுக்கு சேறும் சகதியுமாக கழிவுகள் காணப்படுகின்றன. இதனால் கரை களை ஒட்டி காணப்படும் மணலை, முறல் போன்ற மீன்கள் வசிப்பிடங்களை மாற்றிக் கொண் டதால் அந்த மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ராமேசுவரம், அரிய கடல்வாழ் உயிரினங்களை உள்ளடக்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்க ளாக டால்பின், ஆமைகள், கடல் பன்றி போன்ற உயிரினங்கள் இறந்தநிலையில் கரை ஒதுங்கின. இது கடல் மாசு அடைந்துள்ளதையே காட்டுகிறது. சுற்றுச்சூழல் மாசுக்கு காரணமான கார்பன் டை ஆக்ஸைடை பெருமளவு உறிஞ்சி தூய்மைப்படுத்தும் கடல், தற்போது மாசு ஏற்பட்டு நாசமடைந்துள்ளது. எனவே அக்னி தீர்த்தத்தை மேலும் அசுத்தப்படுத்தாமல் பக்தர்களின் நலனையும், மீனவர்களின் வாழ்வா தாரத்தையும், அரியவகை கடல்வாழ் உயிரினங்களையும் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து ராமேசுவரம் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘ராமேசுவரம் நகராட்சி கழிவுநீர் ஓடைகளில் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் விடப்படுகின்றன. விதிகளை மீறி கழிவுநீரை கலக்கும் தனியார் நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது’ என்றார்.
பக்தர்கள் தரப்பில் கூறும்போது, ‘நகராட்சி அபராதம் விதித்தால் மட்டும் அக்னி தீர்த்தம் கடல் சுத்தமாகிவிடுமா? இனிமேல் கழிவுகள் கலக்காமல் நிரந்தர மாற்று திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். அக்னிதீர்த்தக் கடலை காக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT