Published : 30 Jan 2015 03:26 PM
Last Updated : 30 Jan 2015 03:26 PM

கரூர்: சீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளியிலிருந்து நீக்கம்

கரூர் பேருந்து நிலையத்தில் ஜன. 27-ம் தேதி பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் போதையில் மயங்கிகிடந்த மாணவர் பள்ளியில் இருந்து நேற்று நீக்கப்பட்டார்.

கரூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவந்த வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவர் கடந்த ஜன.27-ம் தேதி தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். போதையில் நண்பர்களுடன் கரூர் பேருந்து நிலையத்துக்குள் செல்ல முயன்றார். நண்பர்கள் சாலையைக் கடந்து பேருந்து நிலையத்துக்குள் சென்றுவிட போதை உச்சத்தில் இருந்த மாணவர் பேருந்து நிலைய நுழைவாயில் பகுதியில் மயங்கி கீழே விழுந்துவிட்டார்.

பள்ளிச்சீருடை அணிந்த நிலையில் மாணவர் போதையில் மயங்கி விழுந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மாணவர் மீது தண்ணீர் தெளித்து எழுப்பமுயன்றனர். ஆனால், அவரால் எழ முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த மாணவரின் பெற்றோர் அங்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து நாளிதழ்கள், ஊடகங்கள், சமூக வலைதளங்களில் செய்தி வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் அரசு உதவி பெறும் பள்ளியில், போதையில் மயங்கிக் கிடந்த மாணவரிடம் அவரது பெற்றோர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து ஒழுங்காக பள்ளிக்கு வராதது, பள்ளிச்சீருடையில் சென்று மது அருந்தி போதையில் பேருந்து நிலையத்தில் மயங்கிக் கிடந்தது ஆகிய ஒழுங்கீன செயல்களுக்காக பள்ளியில் இருந்து அம்மாணவர் நேற்று நீக்கப்பட்டார்.

இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் கூறியபோது, “மாணவர் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து மாணவரின் பெற்றோர், மகனின் பள்ளி மாற்றுச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x