Published : 31 Aug 2016 06:28 PM
Last Updated : 31 Aug 2016 06:28 PM

கனிமவள முறைகேட்டில் விசாரணை தேவை: முத்தரசன்

கனிமவள முறைகேடு தொடர்பான முழுமையான விசாரணை தேவைப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

மேலும், தமிழக அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக அரசு பொறுப்பேற்று நூறு நாட்களை நிறைவு செய்துள்ளது. இக்காலத்தில் அரசின் சாதனைகள் என்று நாளேடுகளில் இன்று முழு பக்க விளம்பரங்கள் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

நூறு நாள் சாதனைப் பட்டியல் வெளியிடுகின்ற இதே நாட்களில் இரு உயர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள செய்தியும் வெளிவந்துள்ளது.

தலைமைச் செயலாளராக பணி புரிந்த ஐஏஎஸ் அதிகாரியான ஞானதேசிகன் மற்றும் எல்காட் நிறுவன மேலாண் இயக்குனரும் கனிமவள ஆணையருமான அதுல் ஆனந்த் ஆகிய இருவரும் திடீர் என இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தொடர்பான விசாரணையில், பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முதல்வரிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருவரும் ஒத்துழைக்காத காரணத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், கனிமவளம் தொடர்பான பல்வேறு அனுமதிகளை வழங்கியதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் தொடர்பு இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், துறை ரீதியான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் நாளேடுகள் வெளியிட்டுள்ள செய்திகள் மூலமாக மிகப் பெரிய அளவில் தவறுகளும், முறைகேடுகளும், பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல்களும் நடந்திருப்பது வெளிப்படையாக தெரிகின்றது.

ஊழல்,முறைகேடுகள் குறித்து இரு உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து அரசு இடைநீக்கம் செய்துள்ளது. இத்தகைய மிகப்பெரும் முறைகேடுகளை இரு அதிகாரிகள் மட்டும் தன்னிச்சையாக செய்திட இயலாது. இவர்களின் பின்னால் இருந்து பலன் பெற்றவர்கள் யார் என்பது வெளிப்படையாக தெரிந்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் செயல்பாடு வெளிப்படைத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

கனிம வளக் கொள்ளையின் காரணமாக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்தில் கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் மற்றும் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி மின் வாரியத்திற்கு நட்டம் ஏற்பட்டுள்ளது.

இம்முறைகேடுகள் குறித்து ஒர் முழுமையான விசாரணை தேவைப்படுகின்றது. பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதியின் மூலம் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x