Published : 30 Nov 2015 08:07 AM
Last Updated : 30 Nov 2015 08:07 AM

கனமழை காரணமாக 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக சென்னை திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, அரியலூர், தருமபுரி, திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி நாகை, கரூர் ஆகிய 14 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு:

சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநிலக் கல்லூரி தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் டிசம்பர் 15-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைககழக பதிவாளர் கணேசன் அறிவித்துள்ளார்.

கனமழைக்கு வாய்ப்பு:

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையுடன், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடலில் மற்று மொரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் தெற்கு அந்தமான் பகுதி யில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி, தென் கிழக்கு வங்கக்கடலில் பயணித்து, தற்போது தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக் கிறது. அதே நேரம், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதி யில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.

டிசம்பர் 1, 2 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை அல்லது மிக கனமழைக்கும், 3-ம் தேதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம், பூதப் பாண்டியில் 4 செ.மீ., பாபநாசத்தில் 3, காட்டுக்குப்பம், மாமல்லபுரம், செங்கோட்டையில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், ஞாயிறு அதிகாலை 5 மணி முதல் 6:30 மணி வரை சென்னை புறநகர் பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.

இதேபோல நாகை, கடலூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி உள் ளிட்ட பல பகுதிகளிலும் நேற்று காலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகல் முதல் சென்னை தி.நகர், வேளச்சேரி, போரூர் மற்றும் புறநகர் பகுதி களில் மழை பெய்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x