Published : 01 Sep 2014 09:48 AM
Last Updated : 01 Sep 2014 09:48 AM

எம்பிபிஎஸ் முதல் ஆண்டு வகுப்பு இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்க கண்காணிப்புக் குழு, புகார் பெட்டி என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி என 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் (15 சதவீதம்) போக மீதமுள்ள 2,172 எம்பிபிஎஸ் இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டது. அதன்படி மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) இரண்டு கட்டங்களாக கவுன்சலிங் நடத்தி அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 2,172 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட 383 எம்பிபிஎஸ் இடங்களை மத்திய அரசு நிரப்பியது. இதேபோல சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் இருந்த 100 பிடிஎஸ் இடங்களும் கவுன்சலிங் மூலம் நிரப்பப்பட்டது.

ராகிங் தடுக்க குழுக்கள்

இந்நிலையில் 19 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஜூனியர் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வதை தடுக்க பேராசிரியர்கள் தலைமையில் கண்காணிப்புக் குழு, ராகிங்கிற்கு எதிரான குழு மற்றும் மாணவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி விடுதியிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ராகிங் தொடர்பான புகார்களை போடுவதற்கு வசதியாக மருத்துவமனை மற்றும் கல்லூரிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சீனியர் மாணவர்கள் யாராவது ராகிங்கில் ஈடுபட்டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் (டிஎம்இ) எச்சரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x