Last Updated : 30 Sep, 2014 12:43 PM

 

Published : 30 Sep 2014 12:43 PM
Last Updated : 30 Sep 2014 12:43 PM

எச்ஐவி பாதித்தவர்களுக்கு உதவும் கேரள தொண்டு நிறுவனம்

தேனி மாவட்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேரள தொண்டு நிறுவனம் இலவசமாக சத்தான உணவுப் பொருள்களை வழங்கி வருகிறது.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டோர் பெரும்பாலும் உற்றார்- உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தால் வெறுத்து ஒதுக்கிவைக்கப் படுகின்றனர். தனிமையால் வாடும் அவர்களுக்கு சிறிய உதவிகூட கிடைக்காத நிலைதான் உள்ளது.

எச்ஐவி பாதித்தவர்களை ஒதுக்கக் கூடாது என்பதற்காக பொதுமக்களுக்கு எச்ஐவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மேலும், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏஆர்டி (ART CENTRES) மையங்கள் மூலம் இலவச தொடர் சிகிச்சை அளிப்பதுடன், மருந்து, மாத்திரைகள் மற்றும் பேருந்து பயண அட்டை ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்தச் சூழலில், தேனி மாவட்டத்தில் உள்ள எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேரளத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் இலவசமாக உணவுப் பொருள்களை வழங்கி வருகிறது. இதற்காக, குமுளியைச் சேர்ந்த ‘மாத்தோமா’ என்ற அந்தத் தொண்டு நிறுவனம் கம்பம் அருகேயுள்ள கே.புதுப்பட்டியில் அலுவலகம் அமைத்துள்ளது.

இதுகுறித்து அந்தத் தொண்டு நிறுவனத்தின் கேரள- தமிழக ஒருங்கிணைப்பாளர் ஜான் பி. ஜாக்கப் கூறியது: தொண்டு நிறுவனம் மூலம் 10 ஆண்டுகளாக குமுளி, பத்திமை திட்டை பகுதியில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோருக்கு உணவுப் பொருள்கள் வழங்கி வருகிறோம். சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் இங்குள்ளவர்களுக்கும் உதவ வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன் கே.புதுப்பட்டியில் அலுவலகம் அமைத்துள்ளோம்.

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 2 வாரங்களுக்கு ஒருமுறை சனிக்கிழமைகளில் 7 கிலோ அரிசியும், அடுத்த 2 வாரங்களுக்குப் பிறகு சுண்டல், பட்டாணி, அவல், பொரி கடலை ஆகியன தலா ஒரு கிலோ, 250 கிராம் பேரீச்சம் பழம் வழங்குகிறோம்.

இவற்றை பெறுவதற்கு ஏஆர்டி மையத்தில் வழங்கப்படும் மாத்திரை அட்டையை மட்டும் கொண்டு வந்து பதிவு செய்து கொண்டால் போதும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x