Published : 26 Apr 2017 07:35 AM
Last Updated : 26 Apr 2017 07:35 AM
இளநிலை அறிவியல் அலுவலர், வட்டார புள்ளியியலாளர் உள்ளிட்ட 3 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மே மாதம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலர் மா.விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தடய அறிவியல் சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 30 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்வில் 4,413 பேர் கலந்துகொண்டனர்.
இவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணலுக்கு 65 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 5-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
தமிழ்நாடு மருத்துவ சார் நிலைப் பணியில் அடங்கிய வட்டார சுகாதார புள்ளியியலாளர் பணியில் 173 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 4,270 பேர் எழுதினர். இதில் நேர்காணலுக்கு 342 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மே 15 முதல் 19-ம் தேதி வரை நடைபெறும்.
குரூப்-3 ஏ தேர்வில் அடங்கிய கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பணியில் 24 காலியிடங்களை நிரப்ப கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வில் 46 ஆயிரத்து 797 பேர் கலந்துகொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு (பட்டியல்-5) 34 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மே 8-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தெரிவு செய் யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT