Published : 22 May 2015 02:22 PM
Last Updated : 22 May 2015 02:22 PM

ஆளுநருடன் ஜெயலலிதா சந்திப்பு: அண்ணா சாலை வழிநெடுகிலும் அதிமுகவினர் உற்சாகம்

தமிழக முதல்வராக ஜெயலலிதா சனிக்கிழமை பதவியேற்பு

தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சட்டப்பேரவை தலைவராக தாம் தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை அளித்தார்.

ஜெயலலிதா நாளை பதவியேற்பு

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நாளை காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. பதவியேற்பு தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, ஆளுநர் மாளிகை வெளியிட்டது.

ஜெயலலிதா முதல்வராக பதவியேற்கிறார். அவர் உட்பட 29 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி, பழனியப்பன், செல்லூர் ராஜூ, காமராஜ்,வேலுமணி, எடப்பாடி பழனிச்சமி, வைத்திலிங்கம், ப.மோகன், செந்தில் பாலாஜி, கோகுல இந்திரா, சின்னையா, தங்கமணி, விஜயபாஸ்கர், அப்துல் ரஹிம், தோப்பு வெங்கடாசலம், வீரமணி, பூனாட்சி, உதயகுமார், எம்.சி.சம்பத் , சுந்தரராஜ், சண்முகநாதன், முக்கூர் சுப்பிரமணியன், ஜெயபால், ரமணா, என்.சுப்பிரமணியன், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள்.

போயஸ் கார்டனில் இருந்து பிற்பகல் 1.28 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு ஜெயலலிதா புறப்பட்டார். வழிநெடுகிலும் உள்ள அதிமுக தொண்டர்கள் மலர் தூவினர்.

கோட்டூர்புரத்தில் இருந்து ராஜ்பவன் நோக்கி ஜெயலலிதாவின் வாகனம் சென்றது. நான்கு வாகனங்கள் ஜெயலலிதாவைப் பின் தொடர்ந்தன. போயஸ் தோட்டத்தில் இருந்து ஆளுநர் மாளிகை வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தது ஜெயலலிதாவை வரவேற்றனர்.

பின்னர், ஆளுநர் மாளிகைக்கு சென்ற ஜெயலலிதா, சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதம் மற்றும் அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கினார். ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பதவியேற்பு குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினார்.

போயஸ் தோட்டம், அண்ணா சாலை மற்றும் ஆளுநர் மாளிகை பகுதிகள் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் ஜெயலலிதா, கிண்டி, சைதாப்பேட்டை வழியாக அண்ணா சாலை ஸ்பென்சர் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு வந்தார். எம்ஜிஆர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய பின், வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்து மீண்டும் அண்ணாசாலை வழியாக சென்று, அண்ணா மேம்பாலம் கீழ் உள்ள பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு போயஸ் தோட்டம் திரும்பினார்.

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா

முன்னதாக, சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். இதற்காக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 7 மணிக்கு ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உட்பட 144 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

10 நிமிடத்தில் நிறைவடைந்த இந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதை, அவரிடம் சொல்வதற்கு முதல்வர் பன்னீர்செல்வம் போயஸ் கார்டன் சென்றார்.

போயஸ்கார்டனில் ஜெயலலிதா சந்தித்த பன்னீர்செல்வம், பின்னர் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் ரோசய்யாவிடம் வழங்கினார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.

முந்தையச் செய்திப் பதிவு: >ஜெயலலிதா வருகை: அண்ணா சாலையும் அதிமுக மயமும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x