Published : 22 May 2015 08:03 AM
Last Updated : 22 May 2015 08:03 AM

அரசுப் பள்ளிகளுக்கு மகுடம் சூட்டிய மாணவர்கள்: தமிழ் வழியில் பயின்று சாதனை படைத்த பாரதிராஜா

அரியலூர் மாவட்டம் பரணம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.பாரதிராஜா 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற 41 பேரில் தமிழ் வழியில் பயின்றவர் பாரதிராஜா மட்டுமே. மேலும், அரசுப் பள்ளியில் பயின்று மாநில அளவில் முதலிடம் பெற்ற 3 பேரில் பாரதிராஜாவும் ஒருவர்.

மாணவர் பாரதிராஜாவின் பெற்றோர் சேகர்- கவிதா. விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.

“சொந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு எனது பெற்றோர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமே காரணம். எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தினால், பிளஸ் 2 வரை இங்கேயே படிக்க வேண்டும் என்ற எனது ஆவல் நிறைவேறும். தொடர்ந்து நன்றாக படித்து ஐஏஎஸ் தேறி, கிராமப்புறங்களில் மக்களுக்காக சேவையாற்ற வேண்டும் என்பதே விருப்பம்” என்றார் பாரதிராஜா.

மாணவி ஆர்.வைஷ்ணவி

அரசுப் பள்ளிகளில்தான் தகுதியுள்ள, திறமையான ஆசிரி யர்கள் இருக்கின்றனர் என்றார். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ள தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.வைஷ்ணவி. தமிழில் 99-ம், மற்ற பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்ணும் பெற்றுள்ள இவர் மேலும் கூறியதாவது:

அரசுப் பள்ளிகளை ஏளனமாகப் பார்க்கும் போக்கு மாறவேண்டும். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்சி அளிக்கின்றனர். எனவே, இது ஒன்றும் பெரிய சாதனை அல்ல. ஆசிரியர்கள் சொல்லித்தரு வதை ஆர்வமுடனும், ஈடுபாட் டுடனும் கேட்டுப் படித்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் சாதிக்கலாம்.

5-ம் வகுப்பு வரை தனியார் ஆங்கில வழிப் பள்ளியில் படித்த நான், 6-ம் வகுப்பில் விரும்பித்தான் அரசுப் பள்ளியில் ஆங்கில வழியில் சேர்ந்தேன்.

மறைந்த எனது தந்தையின் ஆசியும், தாய் காந்திமதியின் தியாகமும், பள்ளித் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கமும், வழிகாட்டுதலுமே அதிக மதிப்பெண் பெறக் காரணம்.

மாநில அளவில் இடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால், முதலிடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி இது. எதிர்காலத்தில் மருத்துவராக விரும்புகிறேன் என்றார்.

மாணவி இ.ஜெயநந்தனா

“கவனச் சிதறல் இல்லாத படிப்பால் வெற்றி கிடைத்ததாக” சேலம் மாவட்டம், வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி இ.ஜெயநந்தனா தெரிவித்தார். இவரும் 499 மதிப்பெண் பெற்றுள்ளார்.

இவரது தந்தை இளங்கோவன், கொங்கணாம்பட்டியில் உணவு பாதுகாப்பு அலுவலராக பணிபுரி கிறார். தாய் தமிழ்செல்வி. தங்கை ஜெயரஞ்சனா. ஜெய நந்தனா 5-ம் வகுப்பு வரை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்தார். ஆறாம் வகுப்பு முதல் வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சேர்ந்து படித்தார்.

10-ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்ற ஜெயநந்தனா தமிழில் 99 மதிப்பெண்களும் மற்ற நான்கு பாடங்களிலும் தலா 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதுகுறித்து மாணவி ஜெயநந்தனா கூறியதாவது:

அரசு ஊழியரான எனது தந்தை என்னை அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்க வேண்டும் என ஆசைப்பட்டு, வாழப்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்க வைத்தார்.

எனக்கு படிப்பில் எந்தளவு ஆர்வம், கவனம் இருந்ததோ அந்த அளவுக்கு தொலைக்காட்சி, விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்தேன். புத்தகப் புழுவாய் இருப்பதில் எனக்கு விருப்ப மில்லை. தினம் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை படித்தேன். கால அட்டவணை போட்டு எல்லாம் படிக்கவில்லை.

இரவு வெகுநேரம் கண் விழித்துகூட படித்ததில்லை. படிக்க கூடிய பாடங்களை கவன சிதறல் இல்லாமல் மனதில் பதிய வைத்து படித்தேன். சிறப்பு வகுப்புகளுக்கும் செல்லவில்லை. பள்ளி தலைமை ஆசிரியர், பாட ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் அளிக்கும் ஊக்கத்தை எனக்கும் அளித்தனர்.

பிளஸ் 2 கணிதம், அறிவியல் பாடத்தை தேர்வு செய்து படிக்க முடிவு செய்துள்ளேன். மாநில அளவில் முதலிடம் பிடிப்பேன் என்று எதிர்பார்த்து படிக்கவில்லை. வகுப்பில் எப்போதும் முதல் ரேங்க்குதான் என்றும் கூறிவிட முடியாது. இரண்டு, மூன்றாவது உள்ளிட்ட ரேங்க்குகளும் எடுத்துள் ளேன். ஆர்வமுடன் விளையா டினால், வெற்றி நிச்சயம்; அக்கறை யுடன் படித்தால் படிப்பிலும் சாதனை படைப்பது சாத்தியம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x