Published : 24 Apr 2014 10:44 AM
Last Updated : 24 Apr 2014 10:44 AM

அதிமுகவினர் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை: ஈ.வி.கே.எஸ் குற்றச்சாட்டு

அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்காததன் மூலம், தேர்தல் ஆணையம் தன் கடமையில் இருந்து தவறிவிட்டது. தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

திருப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், தன் மனைவி வரலட்சுமியுடம், ஈரோடு கச்சேரி வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.

அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்த தேர்தலில் மக்கள் பெருவாரியான சதவீதத்தில் வாக்களிப்பார்கள் என்று நம்புகின்றேன். அதிமுகவினர் வாக்குக்கு 200 ரூபாய் கொடுத்திருந்தாலும் கூட, மக்கள் பணத்தை வாங்கிக் கொண்டு கண்டிப்பாக, யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலைப் பொறுத்தவரையில், மோடி, லேடி, டாடி மூவருக்கும் மக்கள் டாட்டா காட்டி விடுவார்கள். ஈரோடு, திருப்பூர் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் ஒரு வாக்கிற்கு 200 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். அதை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இது தொடர்பாக ஆயிரக்கணக்கான புகார்களைச் சொன்னாலும், அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கட்டுப்பாட்டு அறையை விட்டு வெளியில் வருவதே இல்லை. புகார் செய்தவரின் எண்ணை வாங்கிக் கொண்டு, 10 நிமிடத்திற்கு பின், ‘நாங்கள் அங்கு சென்றோம். அங்கு யாரும் இல்லை’ என சொன்னபதிலையே திரும்ப திரும்ப சொல்கிறார்கள். ஆரம்பத்தில் கண்டிப்பாக இருந்த தேர்தல் ஆணையம், கடைசி நேரத்தில் அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததை தடுக்காமல் இருந்ததற்கு உள் காரணம் இருக்குமோ என்று எனக்குத் தெரியவில்லை. இதற்கு தலைமை தேர்தல் அதிகாரிதான் பதில் சொல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் தன் கடமையில் இருந்து தவறி விட்டது. தேர்தல் ஆணையராக இருப்பவர் கண்டிக்கத்தக்கவர். இவ்வளவு மோசமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்ளும் என நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் மனச்சாட்சி இல்லாமல் செயல்பட்டு இருக்கிறார்கள்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சி.எஸ்.ஐ. மகளிர் மேல்நிலைப்பள்ளில், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வாக்களித்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அதிமுகவினர் வாக்குக்கு பணம் கொடுத்துள்ளனர். அவர்கள் பணம் கொடுத்தாலும், மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள். ஈரோட்டில் மதிமுக உறுதியாக வெற்றி பெறும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x