Published : 19 Feb 2017 06:12 PM
Last Updated : 19 Feb 2017 06:12 PM

அதிகாரப் போட்டியில் அதிமுக, அதிகார வேட்கையில் திமுக, புறக்கடை முயற்சியில் பாஜக: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு

அதிமுகவின் அதிகாரப் போட்டி, திமுகவின் அதிகார வேட்கை, பாஜகவின் புறக்கடை முயற்சி போன்றவற்றால் தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு கவனம் செலுத்தக் கோரி நாளை முதல் 25-ம் தேதி வரையில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் சசிகலா தலைமையில் ஒரு பிரிவு, ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு பிரிவு என பிளவுபட்டு கட்சிப் பொறுப்பு, ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றும் அதிகாரத்திற்கான போட்டியில் இறங்கினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பினைத் தொடர்ந்து சசிகலா சிறை சென்ற நிலையில் சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டு சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெறாத, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடந்துள்ளன. ஜனநாயக நடைமுறைக்கு புறம்பான - சபாநாயகர் மீதான தாக்குதல்கள், மைக்குகள் - சேர்கள் உடைப்பு, ஆவணங்கள் கிழித்து வீசப்பட்டது, சபாநாயகர் இருக்கையில் எம்.எல்.ஏ.க்கள் அமர்ந்து ஆட்டம் போட்டது உள்ளிட்டவை நடந்துள்ளன.

இந்த சம்பவங்கள் சட்டப்பேரவையில் ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக திமுக நடந்து கொண்டதா? என்ற கேள்வியை தமிழக மக்களிடம் எழுப்பியுள்ளது. இவையெல்லாம் அறவழிப்போராட்டம் என்று நம்பச் சொல்கிறது திமுக.

அதிகாரப்போட்டியால் அதிமுகவில் ஏற்பட்ட பிளவை பயன்படுத்தி, அங்கீகாரமற்ற அதிகாரத்திற்கு ஏங்கி ஆளுநரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது பாஜக.

கிரானைட் மலைகளை விழுங்கியது, தாதுமணலை கடத்தியது, ஆற்று மணலை தின்பது என இயற்கை வளக் கொள்ளைகளையும், அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் ஊழல் ததும்பி வழிகிறது. அடி முதல் நுனி வரை லஞ்சமின்றி எதுவும் நடக்காது என்ற நிலைமை உள்ளது. இதனை உரம்போட்டு வளர்த்ததற்கு அதிமுகவும், திமுகவுமே பொறுப்பாகும். இவர்களுக்கு தமிழக மக்கள் நலன் என்பது எள்ளளவும் கிடையாது.

அதிமுகவின் அதிகாரப்போட்டி, திமுகவின் அதிகார வேட்கை, பாஜகவின் புறக்கடை முயற்சி போன்றவற்றால் தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சனைகள் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளின் தற்கொலை - அதிர்ச்சி மரணம், தமிழகம் முழுவதும் குடிநீருக்கு ஏற்பட்டிருக்கும் பஞ்சம், வறட்சியால் இடம்பெயர்தல், கிராமப்புற வேலை உறுதி சட்டத்தின்படி வேலையளிக்காதது, வேலை செய்தவர்களுக்கு சில மாதங்களாக சம்பளம் கொடுக்காமலிருப்பது, ரேஷன் பெறும் உரிமை மறுப்பது, நகரங்களிலும் - கிராமங்களிலும் தீவிரமாகி வரும் வேலையின்மை, நீட் தேர்விலிருந்து விலக்களிக்கும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் இன்னும் ஒப்புதல் அளிக்காமலிருப்பது இவையெல்லாம் ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படவே இல்லை.

இந்நிலையில் தமிழக அரசு மக்கள் எதிர்கொண்டுள்ள உடனடி பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும், சட்டப்பேரவையை ஜனநாயகப்பூர்வமாக நடத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரி மாதம் 20-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தவுள்ளது.

இதற்காக நடைபெறும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் மற்றும் இதர இயக்கங்களில் தமிழக மக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x