Published : 22 Apr 2017 04:32 PM
Last Updated : 22 Apr 2017 04:32 PM
வைகை அணையில் நீர் ஆவியாவதை தடுக்க தெர்மோக்கோல் அட்டைகள் மிதக்க விடப்பட்டது தோல்வியில் முடிந்ததால் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இத்திட்டம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு மதுரை ஆட்சியர் வீரராகவ் ராவ் அளித்த பேட்டியில், "வைகை அணையின் மொத்த உயரம் 71 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 23.10 அடி. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அணையில் உள்ள நீர் ஆவியாவதன் மூலம் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இது மிகப்பெரிய இழப்பு.
இதை எப்படி ஈடுகட்டுவது என்ற ஆலோசனையின்போது வைகை அணையின் செயலாக்க பொறியாளர் எம்.முத்துப்பாண்டியன் தெர்மாகோல் மிதக்கவிடும் திட்டத்தை முன்மொழிந்தார். சோதனை அடிப்படையிலேயே இத்திட்டத்தை நாங்கள் செயல்படுத்த முடிவெடுத்தோம். இது ஒருவேளை வெற்றி பெற்றால் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும்.
தெர்மாகோல் துகள்களால் மீன், பறவை உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பின்னர் ஆய்வு செய்துமுடிவு எட்டப்படும். இப்போதைக்கு நீர் ஆவியாவதை தடுப்பது மட்டுமே முக்கியம் எனக் கூறியிருந்தார்.
ஆனால், அணைப் பகுதியில் அடித்த காற்றால், அமைச்சர்கள், ஆட்சியர்கள் நிகழ்ச்சியை முடித்து கரை ஏறுவதற்குள் தெர் மோக்கோல் அட்டைகள் காற்றின் வேகத்தில் கரை ஒதுங்கியதால் தற்போது அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் மிகக் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT