Published : 17 Jun 2016 03:37 PM
Last Updated : 17 Jun 2016 03:37 PM

யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாமின் சிலை திறப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள பொது நூலகத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சிலையை இலங்கைக்கான இந்தியத் தூதர் சின்கா, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2012 ஜனவரியில் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்திற்கு முதன்முறையாக வந்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் புயலைத்தாண்டினால் தென்றல் என்ற தலைப்பில் பேசினார். இந்த உரையாடலின் போது கலாம் 1941 இல் ராமேசுவரத்திலே 5ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனகசுந்தரநாத் ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன் என்பதையும் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தொடர்ந்து 120 ஆண்டுகள் பழமையான யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் கலாம் உரையாற்றிய போது, மாணவி ஒருவர், "பொறுப்புள்ள இலங்கை பிரஜையாக திகழ நான் என்ன செய்ய வேண்டும்' என கலாமிடம் கேட்டார். அம்மாணவி தொடுத்த வினாவிற்கு, பதிலளித்த கலாம் , உனது இதயத்தில் நேர்மை இருந்தால், உனது நடத்தையில் அழகு இருக்கும். உன் நடத்தையில் அழகு இருந்தால், வீட்டில் அமைதி இருக்கும். வீட்டில் அமைதி இருந்தால், நாட்டில் அமைதி நிலைக்கும், என்றார். கலாம் கூறியதை, அப்படியே எப்பிழையும் இல்லாமல் கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் மடை திறந்த வெள்ளம் போல் திரும்பக் கூறியதைப் பார்த்தவுடன், கலாம் தமக்கு யாழ்ப்பாணத்து இளைஞர்களைப் பற்றிய நம்பிக்கை ஒளி பிரகாசித்தாகக் குறிப்பிட்டார்.

இலங்கையில் நல்ல ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அங்கு வாழும் அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழவேண்டும், அங்கு வாழும் மாணவர்கள், இளைஞர்களுக்கு, வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை வரவேண்டும், அவர்களும் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும் என்ற உள்ளடக்கத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்ககழகம் மற்றும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கலாம் ஆற்றிய உரைகள் இலங்கையின் வட வடமாகாணத்தின் பல இடங்களிலும் இருந்து வருகை தந்திருந்த மாணவர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும் உத்வேகத்தையும் அப்போது ஏற்படுத்தியது.

இரண்டாவது முறையாக கடந்த 2015 ஜுன் மாதம் கொழும்பிற்கு அரசமுறைப் பயணமாகச் இலங்கை சென்றார். அதுவே கலாம் தன்வாழ்நாளில் கடைசியாகப் பயணம் செய்த வெளிநாட்டுப் பயணமும் ஆகும்.

கடந்த வருடம் ஜுலை மாதம் அப்துல்காலம் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பதிவுகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் பலரும் ஆயிரக்கணக்கானோர் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்திருந்தனர். தற்போது இலங்கையின் வடமாகாணங்களில் அப்துல் கலாமின் பெயரில் இளைஞர் சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக இந்திய தூதரகம் சார்பில் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மார்பளவு சிலையினை வெள்ளிக்கிழமை இந்தியத் தூதர் ஒய்.கே. சின்கா, வடமாகாண முதலமைச்சர் வி. விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் என். நடராஜன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சிவஞானம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலார் இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராஜா, யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் வாகீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தியாவிற்கு வெளியே கலாமிற்கு முதன்முறையாக சிலை நிறுவுவது இலங்கையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x