Last Updated : 03 Jan, 2016 12:40 PM

 

Published : 03 Jan 2016 12:40 PM
Last Updated : 03 Jan 2016 12:40 PM

அரை கிராம் தங்கத்தில் கலை நுணுக்கம்: கோவை இளைஞரின் தன்னார்வம்

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், புத்தாண்டை முன்னிட்டும், நதி நீர் இணைப்பை வலியுறுத்தும் விதமாகவும், அரை கிராம் தங்கத்தில் இந்திய வரைபடத்தை கலை நுணுக்கத்துடன் வடிவமைத்துள்ளார்.

கோவை டவுன்ஹால் செட்டிவீதியைச் சேர்ந்தவர் பி.மாரியப்பன் (34). தங்க நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர், புத்தாண்டு பிறப்பையொட்டி, குறைந்த அளவிலான தங்கத்தில் புதுவிதமான வேலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.

அதில், தங்கத்தை மிக மெல்லிய கம்பியாக உருக்கி இந்திய வரைபடம் போன்று உருவாக்கி, அதனுள் 2016 எனக் குறிப்பிட்டுள்ளதுடன், நதிநீர் இணைப்பை வலியுறுத்தும் விதமாக, இடையில் நீள நிற கம்பியை வைத்து நுணுக்கமான வேலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புதுமையான வேலைப்பாடு மற்றவர்களை கவரும் விதத்தில் இருந்தது.

தனது கலை ஆர்வம் குறித்து அவர் கூறியதாவது: கடந்த 19 ஆண்டுகளாக தங்க நகைப்பட்டறை தொழில் செய்து வருகிறேன். 2007-ம் ஆண்டு முதல் விசேஷ நாட்கள், பொது நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றை குறிப்பிடும் விதமாக தங்கத்தில் நுணுக்கமான வடிவமைப்பை மேற்கொண்டு வருகிறேன்.

முதல்முதலாக கடந்த 2007-ம் ஆண்டு 100 மி.கி. தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கோப்பையை உருவாக்கினேன். ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி 150 மி.கி. ஹெல்மெட் தோற்றம், கோவை சி.எஸ்.ஐ. பேராலயம் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 500 மி.கி. அளவில் சி.எஸ்.ஐ. தேவாலயத் தோற்றம், கோனியம்மன் கோயில் தேரோட்டத்தை குறிப்பிடும் வகையில் 1,500 மி.கி. அளவில் கோனியம்மன் தேர் வடிவமைப்பு, நோட்டா குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தும் விதமாக ஒரு கிராமில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் ஆகிய வடிவமைப்பு களை தன்னார்வமாக மேற்கொண்டேன்.

இந்த வேலைப்பாடுகள் பல்வேறு தரப்பினரால் வரவேற்கப்பட்டன. இதனால் ஊக்கம் பெற்று தொடர்ந்து அவ்வப்போது புது விதமாக முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

2016 புத்தாண்டை யொட்டி, 500 மி.கி. தங்க கம்பியில் ஒரு செ.மீ. நீள, அகலத்துடன் இந்தியா வரைபட தோற்றத்தை உருவாக்கி, அதற்குள் 2016 என்ற எண்ணும், நதிநீர் இணைப்பை வலியுறுத்தும் வகையில் நீள நிற தங்க கம்பியை இணைத்துள் ளேன். இதை வடிவமைக்க ஒரு மணி நேரம் ஆனது.

முதலில் இந்திய வரைபடத்தின் அச்சை எடுத்து அதனைக் கொண்டு உருக்கிய தங்கக் கம்பியை பொருத்தி வடிவமைத்தேன். இதுபோன்ற செயல்களால் சமூகத்துக்கு பலன் கிடைக்கிறதா என்பதைக் காட்டிலும், ஒரு நிகழ்வை கலைநுணுக்கத்துடன் பதிவிடும்போது, பிற்காலத்தில் அந்த பொருட்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியான நினைவுகள் ஏற்படுத்தும். அதற்காகத்தான் நினைவுச் சின்னங்களை வடிவமைக்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x