Published : 15 Apr 2014 09:02 AM
Last Updated : 15 Apr 2014 09:02 AM

சிறுவனை மீட்க உதவிய ரோபோ கண்டுபிடிப்பின் உருக்கமான பின்னணி: தீயணைப்பு நிலையங்கள்தோறும் கருவியை வைக்க வேண்டுகோள்

சங்கரன்கோவில் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனைக் காப்பாற்ற உதவிய போர்வெல் ரோபோ கண்டுபிடிப்பின் பின்னணியில் உருக்கமான தகவல்கள் உள்ளன.

இக்கருவியைக் கண்டுபிடிக்க மூளையாக செயல்பட்ட எம்.மணிகண்டன் (43), ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டி:

கோவில்பட்டிக்கு 2003-ம் ஆண்டில் பிளம்பர் வேலைக்கு வந்தேன். அப்போது, எனது 3 வயது மகன் தினேஷ்பாபுவை அழைத்து வந்திருந்தேன். நான் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, அருகில் விளையாடிக் கொண்டிருந்த எனது மகன், அங்குள்ள ஆழ்துளைகிணற்றில் விழும் தருவாயில் தடுத்து காப்பாற் றினேன். அதுதான் எனது மனதில் பொறியாக உருவெடுத்தது.

பலியைத் தடுக்க…

நாட்டில் பல்வேறு சம்பவங்களில் ஆழ்துளை கிணறுகளில் விழுந்து குழந்தைகள் இறக்கும் சம்பவங்களும் என்னை வெகுவாக பாதித்தன. அவர்களைக் காப்பாற்றும் வகையில் கருவி யைக் கண்டுபிடிக்க வேண்டும் என, அப்போதிருந்தே முயற்சி செய்தேன். எனது செலவில் தொடக்கத்தில் ஒரு கருவியை உருவாக்கினேன். அதன் மூலம் குழந்தைகளை மீட்பதில் வெற்றி கிடைக்கவில்லை. பின்னர் படிப்படியாக தொழில் நுட்பங்களைப் புகுத்தி, கருவியை நவீனப்படுத்தினேன்.

நான் பணிபுரியும், மதுரை டி.வி.எஸ். கம்யூனிட்டி கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவி செய்தனர். அதன் அடிப்படையில் கருவியை நவீனப்படுத்தி, தற்போது குழந்தையை மீட்டுள்ளது சந்தோஷமளிக்கிறது.

கண்காட்சியில் பரிசு

இக்கருவியின் மாடலை, எனது மகன் அறிவியல் கண்காட்சியில் வைத்து மாநில அளவில் பரிசும் பெற்றுள்ளான். இக்கருவியை அறிமுகம் செய்தபோது, அரசுத் துறைகள் வரவேற்பு அளிக்க வில்லை. கருவியின் செயல்பாடு குறித்து தீயணைப்புத் துறைக்கு பலமுறை கடிதங்கள் அனுப்பி யிருந்தேன். இதற்காக எனது சொந்த காசை செலவிட்டு சென்னைக்குச் சென்று, கருவியின் செயல்விளக்கத்தை செய்து காண்பித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து எவ்வித ஒத்துழைப்பும் அளிக்கப் படவில்லை.

நானும் என்னோடு இருப்ப வர்களும் முயற்சி செய்து இந்த கருவியை உருவாக்கி, சேவையாகவே இப்பணியில் ஈடுபடுகிறோம். எங்களுக்குத் தகவல் கிடைப்பதில் ஏற்படும் தாமதம் மற்றும் மீட்பு பணியின்போது ஆழ்துளை கிணற்றுக்குள் மணல் விழுவது உள்ளிட்ட காரணங்களால் போர் வெல் ரோபோ மூலம் நாங்கள் மீட்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வந்தது.

அனைவரும் ஒத்துழைப்பு

சங்கரன்கோவில் பகுதியில் முழுமையாக அனைத்து தரப்பி னரின் ஒத்துழைப்புடன் மீட்பு பணியை மேற்கொண்டதால், சிறுவனை உயிருடன் மீட்டோம். இக்கருவியை மாவட்டம்தோறும் வைக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம்.

குறிப்பாக தீயணைப்பு நிலை யங்கள் தோறும் இக் கருவியை வைத்துக்கொண்டால், மீட்பு பணிகளுக்குப் பயன்படுத்தி குழந்தைகளைக் காப்பாற்ற முடியும்.

இக்கருவியை யார் வேண்டு மானாலும இயக்க முடியும். இதைத் தயாரிக்க ரூ. 60,000 வரை தான் செலவாகும் என்றார் மணிகண்டன்.

1,000 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தையையும் மீட்கலாம்!

ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற மதுரையைச் சேர்ந்த எம்.மணிகண்டனால் உருவாக்கப்பட்டுள்ள போர்வெல் ரோபோ கருவியின் செயல்பாடு குறித்து அவரே விளக்குகிறார்:

ஆழ்துளைக் கிணற்றில் ஆயிரம் அடி ஆழத்தில் குழந்தைகள் சிக்கி இருந்தாலும் கூட, இக்கருவியின் உதவியால் மீட்க முடியும். `12 வி’ பேட்டரி, டிசி மோட்டார் மூலம் இந்த கருவி இயங்குகிறது. குழந்தைகளைப் பற்றிப்பிடிக்கும் வகையிலான இயந்திர கை தானாக சுருங்கி விரியும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது. மின்சப்ளை இல்லாத இடங்களில் பேட்டரி மூலமும் இதை இயக்க முடியும். குழந்தையை மீட்டு வரும்போது, குழந்தை நழுவி விடாமல் இருக்க மடங்கும் விரல்கள் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

மொத்தம் 2 அடி உயரம், 5 கிலோ எடை உள்ள இந்த இயந்திரத்தை எங்கும் எளிதாக எடுத்துச் செல்லலாம். குழிக்குள் சிக்கிய குழந்தையை அழுத்தும்போது ஏற்படுத்தும் அழுத்த அளவை துல்லியமாக அறிந்து கொள்ள, `பிரஸ்ஸர் கேஞ்ச்’ அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

குழிக்குள் தவறி விழுந்த குழந்தையின்மீது மண் சரிவதால் மீட்புப் பணியில் ஏற்படும் சிரமங்களை நீக்க மண் அள்ளும் இயந்திரம், வாக்குவம் பம்ப் ஆகியவையும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. இந்த இயந்திரத்துக்கு 2006-ல் விருதும், அங்கீகாரமும் அளித்திருக்கிறது. 2007-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரால் குடியரசு தினவிழாவில் நற்சான்றிதழ் அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x